Sunday, September 7, 2008

http://muelangovan.blogspot.காம்


புலவர் செ.இராசு அவர்கள்

திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் யான் முதுகலைத் தமிழ் இலக்கியம் பயின்றபொழுது நடைபெற்ற இலக்கியமன்ற விழாவில் அறிஞர்கள் பலர் உரையாற்ற அழைக்கப் பெற்றிருந்தனர். அவர்களுள் எளிய தோற்றத்துடன் ஒருவர் மிகச் சிறந்த கல்வெட்டுச் செய்திகளை அவைக்கு வழங்கிக்கொண்டிருந்தார்.தமக்குத் தொடகத்தில் பேச இயலாத தன்மை இருந்ததாகவும் பின்னர் பேசிப்பேசி அக்குறை நீங்கிவிட்டதாகவும் குறிப்பிட்ட அந்த அறிஞரின் பேச்சு இன்றும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டே உள்ளது.

ஆம்.அவ்வாறு பேசியவர் நம் மதிப்பிற்குரிய புலவர் செ.இராசு அவர்களேயாவர்.பிறகு அவர்கள் எழுதிய நூல்கள், கட்டுரைகள், ஆய்வுரைகளைப் படிக்கும் வாய்ப்பு அமைந்தாலும் அவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு அமையாமல் போனது.அண்மைக் காலமாக எமக்கு வாய்த்த உயரிய நட்புக்கு உரிய முனைவர் நா.கணேசன்(அமெரிக்கா) அவர்கள் வழியாகப் புலவரின் பன்முகச் சிறப்புகளையும் உள்ளம் உவக்கும்படி கேட்டு அவர்களுடன் நட்பு கொள்ளத் தொடங்கினேன்.

தமிழுக்கு உழைத்த அறிஞர் பெருமக்களின் வரலாறு இணையத்தில் பார்வைக்குக் கிடைக்காத சூழலில் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பை இயன்ற வகையில் எழுதுவதை வழக்கமாகக் கொண்டவன் யான் என்பதால் புலவர் செ.இராசு அவர்களின் வாழ்க்கைக் குறிப்பை இணையத்தில் அறிய விழைவார்க்குப் பயன்படும் வகையில் பதிவு செய்கிறேன்.விரிவான வரலாறு அறிய விழைவாருக்கு உதவும் வகையில் அவர்களின் முகவரியும் தருகிறேன்.தக்கவர்கள் தக்காங்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

புலவர் செ.இராசு அவர்கள் 02.01.1938 இல் வெள்ளமுத்துக்கவுண்டன் வலசு(பெருந்துறை வட்டம்,ஈரோடு மாவட்டம்)என்னும் ஊரில் பிறந்தவர்.பெற்றோர் ந.சென்னியப்பன், நல்லம்மாள்.இவர்தம் மனைவியார் பெயர் கெளரி அம்மாள்.மூன்று ஆண்மக்கள் இவருக்கு வாய்த்தனர்.கணிப்பொறித் துறையில் இவர்கள் பணிபுரிகின்றனர்.

தொடக்கக் கல்வியை(1-5) திருப்பூர் கருவம்பாளையம்,தண்ணீர்ப்பந்தல்,வள்ளுவர் தொடக்கப்பள்ளி,ஞானிபாளையம்,இலண்டன் மிசன் பள்ளி(ஈரோடு)செங்குந்தர் உயர்நிலைப்பள்ளியில் பயின்றவர்.திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் வித்துவான் படிப்பை நிறைவுசெய்தவர்(1955-59).சென்னைப் பல்கலைக்கழகத்தில் பி.லிட்,முதுகலைப் பட்டங்களைப் பெற்றவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் கொங்கு நாட்டு வரலாற்றில் சமண சமயம் என்னும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்.

ஈரோட்டில் தமிழாசிரியர் பணியைத் தொடங்கி(1959),1980-82 இல் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையில் பணிபுரிந்தார்.பிறகு தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக 1982 இல் இணைந்து கல்வெட்டு,தொல்லியல் துறையில் துறைத் தலைமைப் பொறுப்பை ஏற்றுத் திறம்பட ஆய்வுப்பணியை மேற்கொண்டிருந்தார்.

இவர்தம் பணிக்கு மேலும் பெருமை கிடைக்கும்படி பல்வேறு தமிழ் அமைப்புகள் இவருக்குச் சிறப்புப் பட்டங்களை வழங்கிச் சிறப்பித்துள்ளது. அவற்றுள் கல்வெட்டறிஞர், பேரூராதீனப் புலவர்,கல்வெட்டியல் கலைச்செம்மல்,திருப்பணிச்செம்மல் உள்ளிட்ட பட்டங்கள் குறிப்பிடத் தக்கன.

இவர் மலேசியா,சிங்கப்பூர்,இலங்கை(4 முறை) நாடுகளுக்குக் கல்விப் பயணமாகச் சென்று வந்தவர்.

1959 இல் தமிழாசிரியர் பணியேற்றது முதல் கடந்த ஐம்பது ஆண்டுகளாகக் கல்வெட்டு, செப்பேடு,ஓலைப் பட்டயம்,ஓலைச்சுவடி,இலக்கியம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.பெரும்புலவர் தெய்வசிகாமணிக் கவுண்டரிடம் சுவடிப்பயிற்சி,பேராசிரியர் கா.ம.வேங்கடராமையாவிடம் கல்வெட்டுப் பயிற்சி,தொல்லியல் துறையின் மேனாள் இயக்குநர் இரா.நாகசாமியிடம் தொல்லியல் பயிற்சியும் பெற்று, தொடர்ந்து களப்பணிகள் வழியாகத் தன் பட்டறிவை வளர்த்துக்கொண்டார்.

இவர் அடிப்படையில் தமிழ்ப்புலமை பெற்றவர். ஆதலால் தமிழ் ஆவணங்களைப் பிழையின்றி ,பொருள் உணர்ச்சியுடன் படிப்பதில் வல்லவர்.கல்வெட்டு,செப்பேடு,சுவடி பற்றிய தகவல் கிடைத்தவுடன் விரைந்து சென்று அவைகளை ஆய்வு செய்து செய்திகளாகவும், கட்டுரைகளாகவும்,நூல்களாகவும் வெளி உலகிற்கு வழங்குவதில் வல்லவர்.இவ்வகையில் இவர் வெளியிட்ட நூல்கள் நூற்றுக்கு மேல் அமைகின்றன. கட்டுரைகள் 250 அளவில் வெளிவந்துள்ளன.செய்திகள் 100 மேல் வந்துள்ளன.

பேராசிரியர் அ.சுப்பராயலு அவர்களுடன் இணைந்து தமிழகத் தொல்லியல் கழகம் நிறுவி எட்டாண்டுகளாகத் தொடக்கச் செயலாளராகவும்,பின்னர் தலைவராகவும் செயல்பட்டவர். ஆவணம் என்ற இதழ் கொண்டுவரக் காரணமானவர்.பல்வேறு அமைப்புகளில் உறுப்பினராக இருந்து திறம்படப் பணிபுரிபவர்.ஆசிரியப்பணி புரிந்த பொழுது மாணவர்களை வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களுக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு வரலாற்று ஆர்வம் ஊட்டியவர்.

பல கல்லூரிகளில் இவரின் முயற்சியால் தொல்லியல் அருங்காட்சியகம் நிறுவப்பட்டுள்ளது.இவர்தம் கண்டுபிடிப்புகளுள் பல இவரின் பெருமையை என்றும் நினைவுகூரும்.அவற்றுள் 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட அறச்சலூர் இசைக்கல்வெட்டைக் கண்டுபிடித்து உலகிற்கு வெளிப்படுத்தியவர்.இந்தியாவில் இதுவே முதலாவது இசைக் கல்வெட்டாகும்.

சங்க காலத்தில் கொடுமணம்(இன்றைய கொடுமணல்) ஊரைக் கண்டறிந்து அகழாய்வு செய்து உரோமானியர்களுடன் தொடர்புடைய நொய்யல் கரை நாகரிகம் வெளிப்படுத்தியது இவர் கண்டுபிடிப்புகளுள் மற்றுமொரு குறிப்பிடத்தகுந்த பணியாகும்.தென்னிந்தியாவில் மிக அரிதான பாடலுடன் கூடிய பழமங்கலம் நடுகல் கண்டறிந்தமையும் குறிப்பிடத் தகுந்த பணியேயாகும்.

சித்தோட்டுக்கு அருகில் குட்டுவன் சேய் பிராமி கல்வெட்டைப் படித்து அறிவித்த இவர்தம் பணி குறிப்பிடத்தக்கது.சென்னையிலிருந்து பூனா செல்லவிருந்த தஞ்சை மராட்டியர்களின் மோடி(மோடி என்பது மராட்டிய மொழியின் சுருக்கெழுத்தாகும்) ஆவணங்களைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்குக் கொண்டு வந்த முயற்சியும் இவருடையது ஆகும்.

தமிழ் ப்பல்கலைக்கழகத்தின் முதல் நூலாக இவருடைய நூல் வெளியிடப்பட்டது.ஆய்வாளர்கள் நிகழ்கால வரலாற்றிலும் கவனம் செலுத்தவேண்டும் என்ற எண்ணத்தில் கண்ணகி கோட்டம்,கச்சத்தீவு உள்ளிட்ட புகழ்பெற்ற நூல்களையும் வெளியிட்டுள்ளார்.இவர் தம் உழைப்பில் கொங்கு,சுவடி,ஆவணம்,தேனோலை,கொங்குமலர் உள்ளிட்ட இதழ்கள் பொலிவு பெற்றன.

புலவர் செ.இராசு அவர்கள் பதிப்பித்த சுவடிப் பதிப்புகள்.

1.கொங்கு மண்டல சதகம் 1963
2.மேழி விளக்கம் 1970
3.மல்லைக் கோவை 1971
4.பூர்வச்சக்கரவர்த்தி நாடகம் 1978
5.கொடுமணல் இலக்கியங்கள் 1981
6.பூந்துறைப் புராணம் 1990
7.மரபாளர் உற்பத்திக்கும்மி 1995
8.மங்கலவாழ்த்து 1995
9.ஏரெழுபது 1995
10.திருக்கை வழக்கம் 1995
11.கம்பர் வாழி 1995
12.ஞானமாலை 1997
13.புயல் காத்துப்பாட்டும் பஞ்சக்கும்மியும் 1997
14.கல்வியொழுக்கம் 1998
15.திங்களூர் நொண்டி1998(இணையாசிரியர்)
16.நீதியொழுக்கம் 2002
17.பஞ்சக்கும்மிகள் 5 (அச்சில்)

தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடுகள்

1.தஞ்சை மராட்டியர் செப்பேடுகள் 1983
2.தஞ்சை மராட்டியர் கல்வெட்டுகள் 1987
3.கொங்கு நாட்டுச் சமுதாய ஆவணங்கள் 1991
4.சேதுபதி செப்பேடுகள் 1994
5.சோழமண்டல சதகம் 1994
6.கல்வெட்டியலும் வரலாறும் 2001
7.தொண்டைமான் செப்பேடுகள் 2004

வட்டார,ஊர் வரலாற்று நூல்கள் :

1.எங்கள் பவானி 1967
2.தங்கம்மன் திருக்கோயில் வரலாறு 1981
3.வெள்ளோடு சாத்தந்தைகுல வரலாறு 1987
4.முருங்கத்தொழுவு பெரியகுல வரலாறு 1989
5.நாகம்பள்ளி காணியாளர் வரலாறு 1989
6.அனுமன்பள்ளி பண்ணைகுல வேளாளர் வரலாறு 1990
7.பரஞ்சேர்வழி காணியாளர் குல வரலாறு 1990
8.தலையநல்லூர்க் கூறைகுல வரலாறு 1990
9.கொடுமணல் வரலாறு 1991
10.ஆலாம்பாடி பொருள் தந்த குல வரலாறு 1993
11.கீரனூர்க் காணியாளர்கள் வரலாறு 1993
12.நசியனூர்க் காணியாளர் வரலாறு 1994
13.நசியனூர்க் கண்ணகுல வரலாறு 1994
15.சின்ன அண்ணன்மார் கோயில் வரலாறு 1994
16.காடையூர் முழுக்காதுகுல வரலாறு 1994
17.எழுமாத்தூர்ப் பனங்காடர்குல வரலாறு 1995
18.கொங்கு நாட்டுச் செம்பூத்த குல வரலாறு 1995
19.காங்கயம் அகத்தீசுவரர் கோயில் வரலாறு 1995
20.ஆனங்கூர்க் காணியாளர் வரலாறு 1997
21.கண்ணபுரம் செங்கண்ணர்குல வரலாறு 1997
22.ஊத்துக்குளி கதித்தமலை வரலாறு 1997
22.திண்டல்மலை வரலாறு 1997
23.அத்திப்பாளையம் செம்பூத்தகுல வரலாறு 1998
24.கொத்தனூர்க் குழாயகுல வரலாறு 1998
25.கத்தாங்கண்ணி வெண்டுவகுல வரலாறு 1998
26.பொன் ஆரியூர் வரலாறு 1998
26.கொங்கூர் வெண்டுவகுல வரலாறு 1999
27.குமரமங்கலம் தூரகுல வரலாறு 1999
28.நல்லூர் வரலாறு 2000
29.நீலம்பூர் வரலாறு 2000
30.புத்தரச்சல் குழாயகுல வரலாறு 2000
31.சிவன்மலை வரலாறு 2000
32.முத்தூர் வரலாறு 2001
33.அமுக்கயம் பொருள் தந்தகுல வரலாறு 2001
34.கொங்கலம்மன் கோயில் வரலாறு 2001
35.ஆயப்பரப்பு வரலாறு 2001
36.பிடாரியூர் வரலாறு 2001
38.நல்லூர் பனங்காடர்குல வரலாறு 2001
39.கிழாம்பாடி கண்ணகுல வரலாறு 2001
40.கொல்லன்கோயில் வரலாறு 2002
41.தாராபுரம் வரலாறு 2004
42.வள்ளியறச்சல் வரலாறு 2005
43.கோலாரம் வரலாறு 2005
44.கொளிஞ்சிப்பட்டி பண்ணைகுல வரலாறு 2005
45.மேல் ஒரத்தை வரலாறு 2005
46.மறவபாளையம் வரலாறு 2005
47.வரலாற்றில் அறச்சலூர் 2006
48.பருத்திப்பள்ளி செல்லகுல வரலாறு 2006
49.வெள்ளோடு காணியாளர் வரலாறு 2007
50பொங்கலூர் பொன்னகுல வரலாறு 2007
51.ஈங்கூர் ஈஞ்சகுல வரலாறு 2008
52.தோளூர் காணியாளர் வரலாறு 2008

பிற குறிப்பிடத் தகுந்த நூல்கள்


1.கொங்கு குல மகளிர் 2008
2.ஈரோடு மாவட்ட வரலாறு 2008
3.காளிங்கராயன் கால்வாய் 2007
4.ஈரோடு மாவட்டக் கல்வெட்டுக்கள் (தொகுதி - 1) 2007
5.கொங்கு வேளாளர் கல்வெட்டும் காணிப்பாடல்களும் 2007
6.கொங்கு வேளாளர் செப்பேடு, பட்டயங்கள் 2007
7.தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள் 2007
8.கொங்கு நாடும் சமணமும் 2005
9.வெண்டுவண் குல வரலாறு 2005
10.தொண்டைமான் செப்பேடுகள் 2004
11.உ.வே.சா பதிப்புப் பணியும் பன்முக மாட்சியும் 2003
12.கொங்கு நாட்டுவேளாளர் வரலாறு 2003
13.காடையீசுவரர் கோயில் பொருளந்தை முழுக்காது குல வரலாறு 2002
14.திருப்பனந்தாள் காசிமடத்துச் செப்பேடுகள் 1999
15.ஆரியூர் வெண்டுவன்குல வரலாறு 1998
16.கொத்தனூர்க் காணியாளர், குழாயர்குல வரலாறு 1998
17.வரலாற்றுக் கலம்பகம் 1998
18.விதரி அத்திப்பாளையம் செம்பூத்த குல வரலாறு 1998
19.ஆனங்கூர் கரியகாளியம்மன் கோயில் காணியாளர்கள் வரலாறு 1997
20.ஊத்துக்குழி கதித்தமலை வரலாறு 1997
21.கச்சத் தீவு 1997
22.கூனம்பட்டி மாணிக்கவாசகர் திருமடாலய வரலாறு 1994
23.நெஞ்சை அள்ளும் தஞ்சை 1994
24.பூந்துறைப் புராணம் 1994
25.செந்தமிழ் வேளிர் எம்.ஜி.ஆர் - ஒரு வரலாற்று ஆய்வு 1985
26.கலைமகள் கலைக்கூடக் கையேடு 1984
27.கலைமகள் கலைக்கூடம் 1981
28.நன்னூல் உரை 1980
29.கண்ணகி கோட்டம் 1976
30.திருமந்திரம் 100 1967
31.சிவாக்கிர யோகிகள் ஆதீன வரலாறு 1959

புலவர் பெருமகனாரின் முகவரி :

புலவர் செ.இராசு அவர்கள்,
64 / 5 டி.பி.ஜி.காம்பளக்சு
புதிய ஆசிரயர் குடியிருப்பு அருகில்,
ஈரோடு -638 011

பேசி : 0424 -2262664
செல்பேசி : 99942 77711

நன்றி :
தி இந்து நாளிதழ்(படம்)
தூரிகா வெங்கடேசு
நா.கணேசன்(ஊசுடன்,அமெரிக்கா)
விருபா
கா.சா.சு.செந்தமிழ்க்கல்லூரி,திருப்பனந்தாள்

2 comments:

Unknown said...

ராசு அய்யாவின் தொடர்பு எண் என இங்கு பகிரப்பட்டுள்ள செல்பேசி எண்ணில் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை... வேறு யாரோ போன் எடுக்கின்றனர்....

Unknown said...

தமிழர் வரலாறு தொடர்பான நிகழ்ச்சி ஒன்றிற்கு அவரை பேட்டி காணலாம் என எண்ணம் உள்ளது... தொடர்பு எண் தந்து உதவினால் மகிழ்வேன்...