Tuesday, September 2, 2008


அண்மைக் காலத் தொல்லியல் கண்டுபிடிப்புகள் பற்றி...

எஸ். இராமச்சந்திரன்




2006-ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து மே மாதம் முதல் தேதி வரை தமிழகத்தில் நிகழ்ந்த இரண்டு முதன்மையான தொல்லியல் கண்டுபிடிப்புகள் செய்தித் தாள்களின் மூலம் பொதுமக்கள் முன்னர் வைக்கப்பட்டன. அவற்றுள் முதலாவது கண்டுபிடிப்பு, தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி வட்டம் புலிமான்கோம்பை என்ற ஊரில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக ஆய்வு மாணவர்கள் வி.பி. சதீஷ்குமார், சி. செல்வகுமார் ஆகியோரால் கண்டறியப்பட்ட பிராமி எழுத்துகளில் அமைந்த நடுகற்கள் ஆகும். இவற்றுடைய காலம் கி.மு. 2-3ஆம் நூற்றாண்டு என அறிஞர்களால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

(செய்தி மற்றும் படங்களுக்கு நன்றி: The Hindu April 5, 2006.)

அடுத்த கண்டுபிடிப்பு மயிலாடுதுறை அருகிலுள்ள செம்பியன் கண்டியூர் என்ற ஊரில் தனியார் ஒருவரால் தமது வீட்டுத் தோட்டத்திலிருந்து தற்செயலாகத் தோண்டியெடுக்கப்பட்ட கல்லாலான கைக்கோடரிகள் ஆகும். இக் கைக்கோடரிகள் கி.மு. 1500க்கும் கி.மு. 1000க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் தமிழகத்தில் நிலவிய உலோகப் பயன்பாட்டு யுகத்துக்கு முற்பட்ட புதிய கற்காலப் பண்பாட்டு நிலையைச் சேர்ந்த தொழிற்கருவி ஆகும். தொல்லியலாளர்கள் இக்கருவியை 'செல்ட்' (Celt) என்று வழங்குவர். தற்போதைக்கு நாமும் இதனை செல்ட் என்றே குறிப்பிடலாம். இவற்றுள் ஒரு செல்ட்டில் ஹரப்பன் பண்பாட்டுக் காலகட்டத்தை (கி.மு. 2800- கி.மு. 1700)ச் சேர்ந்த சித்திர வடிவக் கருத்துரு எழுத்துகள் பொறிக்கப்பட்டிருப்பதாக தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

(செய்தி மற்றும் படங்களுக்கு நன்றி: The Hindu May 01, 2006).

இக் கட்டுரையின் நோக்கம் மேற்குறித்த இரு கண்டுபிடிப்புகளின் முக்கியத்துவம் பற்றியும், இவற்றின் மூலம் செய்யப்படும் பரபரப்பு அம்சம் சார்ந்த பிரசாரம் பற்றியும், தமிழ் மொழி குறித்த பெருமித உணர்வுக்கு தீனி போடுகின்ற முயற்சி பற்றியும் விவாதிப்பதே ஆகும்.

சில கேள்விகள்

முதலாவது கண்டுபிடிப்பாகக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள நடுகற் கல்வெட்டுகள் ஐயத்துக்கு இடமற்ற வகையில் மிக அரிய கண்டுபிடிப்பாகும். இன்றைய நிலையில் இந்த நூற்றாண்டின் முதன்மையான கண்டுபிடிப்பாக இவற்றைச் சொல்லலாம். ஏனென்றால், சங்க காலம் என்று கருதப்படுகின்ற கி.மு. 3ஆம் நூற்றாண்டு தொடங்கி கி.பி. 5ஆம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்த நடுகற்கள் எவையும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே இக்கண்டுபிடிப்பின் மூலம் சங்க இலக்கியங்களில் நடுகற்கள் பற்றிக் குறிப்பிடப்படும் செய்திகள் சமகாலத்தில் நடைமுறையில் இருந்தவையே என்பது நிரூபணமாகிறது. இது மட்டுமன்றித் தமிழ் எழுத்துகளின் அரசு சார்ந்த, நிறுவனமயமாக்கப்பட்ட வளர்ச்சி என்ற பொருண்மைக்கும் நடுகல் வழிபாட்டை அரசு என்ற நிறுவனம் சுவீகரித்துத் தனக்குச் சாதகமாக எவ்வாறு பயன்படுத்திக் கொண்டது என்பது போன்ற சமூக அரசியல் வரலாறு குறித்த ஆய்வுப் பொருண்மைகளுக்கும் இக் கல்வெட்டுக் கண்டுபிடிப்பு துணை செய்கின்றது. இந்நடுகற்களுள் முதலாவது நடுகல்லில் "வேள் ஊர் அவ்வன் பதவன்" என்றும், அடுத்த நடுகல்லில் "அன் ஊர் அதன்.. அன் கல்" என்றும், மூன்றாவது நடுகல்லில் "கல் பேடு தீயன் அந்தவன் கூடல் ஊர் ஆகோள்" என்றும் பொறிக்கப்பட்டுள்ளன. இம்மூன்று நடுகற்களும் இறந்து போன வீரர்களின் நினைவுச் சின்னங்களாக எழுப்பப்பட்ட கற்கள் ஆகும். இவற்றில் உருவம் எதுவும் பொறிக்கப்படவில்லை. ஆயினும் வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

மூன்றாவதாகக் குறிப்பிடப்பட்டுள்ள நடுகல் கல்வெட்டில் கூடலூர் என்ற ஊரைச் சேர்ந்தவர்கள், மாட்டு மந்தைகளை (ஆனிரையை)க் கவர்ந்து செல்ல முயன்ற போது தீயன் அந்தவன் என்பவன் ஆனிரையை மீட்டு அந்தப் பூசலில் இறந்து போன செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. வைகை அணைக்கட்டுக்கு அருகிலுள்ள கூடலூர்ப் பகுதியில் ஆனிரை கவரும் கள்வர், எயினர் (மறவர்) போன்ற குலத்தவர்கள் நீண்ட நெடுங்காலமாக வாழ்ந்து வந்துள்ளனர். சங்க இலக்கியமாகிய புறநானூறு 347ஆம் பாடலில் 'மணம் நாறு மார்பின் மறப்போர் அகுதை குண்டு நீர் வரைப்பின் கூடல்' என்ற ஒரு குறிப்பு உள்ளது. இப்பாடலில் குறிப்பிடப்படும் கூடல் மேற்குறித்த கூடலூராக இருக்கலாம். மறவருள் ஒரு பிரிவினராகிய அகத மறவர் பிரிவினரின் மூதாதையாக இந்த அகுதையைக் கருதுவதில் தவறில்லை. அகுதை என்ற குறுநிலத் தலைவன் ஒருவன் 'பொன்புனை திகிரி' (உலோகத்தாலான சக்ராயுதம்) என்ற ஆயுதத்தைக் கண நேரத்துக்குள், கண்டது உண்மையோ பொய்யோ என்று மருளும் வண்ணம், கண் பார்வைக்குத் தோன்றி மறைந்து விடக்கூடிய வகையில் விரைந்து செலுத்தவல்ல ஒரு வீரன் என்று புறநானூறு 233-ஆம் பாடலில் ('அகுதைக் கண் தோன்றிய பொன்புனை திகிரியிற் பொய்யாகியரோ') கூறப்பட்டுள்ளது. மறவர்களின் முதன்மையான போர்க்கருவி என்று இலக்கியங்களும் பிற குறிப்புகளும் தெரிவிக்கின்ற வளைதடி (வளரி)யே திகிரி என்று இப்பாடலில் குறிப்பிடப்படுகிறது. இத்தகைய ஆனிரை கவரும் மறவர்களின் ஆகோள் மரபினைப் பற்றிச் சிலப்பதிகாரம் வேட்டுவ வரியில் தெளிவான குறிப்புகள் உள்ளன. இத்தகைய கள்வர்-மறவர் மரபினரால் கவர்ந்து செல்லப்பட்ட ஆநிரைகளைக் காத்து மடிந்த வீரனைப் பற்றியதே இந்த நடுகல் என்பது புலனாகிறது. இந்நடுகல் எந்த அரசரின் ஆதரவுடன் எழுப்பப்பட்டது என்ற விவரம் கல்வெட்டில் குறிப்பிடப்படவில்லை. ஆயினும் பெருவேந்தர்களின் ஆதரவுடன்தான் இந்த நடுகல் எழுப்பப்பட்டிருக்க வேண்டும் என்று நாம் ஊகிப்பது எளிது.

இக் கல்வெட்டில் பயன்படுத்தப்பட்டுள்ள பிராமி எழுத்து முறை கி.மு. 3ஆம் நூற்றாண்டில் அசோகப் பெருவேந்தனால் பரவலாகப் பயன்படுத்தப்பட்டதாகும். கி.மு. 1500-1000ஆண்டுகளுக்குள் ·பினிஷியா (Phoenecia) என்ற மத்திய தரைக்கடல் நாட்டுப் பகுதியில் உருவாக்கப்பட்ட வட அரமைக் (Aramaic) எழுத்துகளைப் பின்பற்றிக் கி.மு. 4ஆம் நூற்றாண்டு அளவில் வட இந்திய மொழிகளின் ஒலிகளுக்கேற்ப உருவாக்கிக் கொள்ளப்பட்ட எழுத்து முறையே பிராமி எழுத்து முறையாகும். தகவல் பரிமாற்றத்தை எளிமைப்படுத்திய அகர வடிவ எழுத்து முறையாகிய பிராமி எழுத்து முறையைத் தமிழ் மொழியின் ஒலிப்பு முறைக்கேற்பச் சில மாற்றங்களுடன் சுவீகரித்து வடிவமைத்து, ஓரளவு கல்வியறிவும் படிப்பறிவும் உள்ள மக்கள் புரிந்து கொள்வதற்குத் தக்க வகையில் அதனைக் கல்லில் பொறித்து வைப்பது என்பது, சமூக அமைப்பும் அரசு சார்ந்த கல்வி நிறுவனங்களும் பெருமளவு வளர்ச்சி பெற்ற நிலையில் இருந்தால்தான் சாத்தியமாகும். எனவே, இந்நடுகல் மதுரையில் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த பாண்டிய மன்னர்களின் ஆதரவுடன் எழுப்பப்பட்ட நடுகல்லாகவே இருக்க வேண்டும். அதே நேரத்தில், வேறு ஒரு முதன்மையான வரலாற்று உண்மையையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. மெளரியர் ஆட்சிக் காலத்தில் இந்தியாவுக்கு வருகை தந்த மெகஸ்தனிஸ் என்ற கிரேக்கர் தாம் எழுதிய இந்திகா என்ற நூலில் பாண்டியா என்ற அரசி தனது நாட்டை 360 ஊர்களாகப் பிரித்து நிர்வாகம் செய்து வந்தாள் என்று குறிப்பிட்டுள்ளார். இதன் உண்மையான பொருள், பாண்டிய நாட்டில் சுயச் சார்புடைய ஊராட்சி நிர்வாகம் கி.மு. நான்காம் நூற்றாண்டிலேயே வளர்ச்சியடைந்த நிலையில் இருந்தது என்பதுதான். அந்த அடிப்படையில் பார்த்தால், வரையறுக்கப்பட்ட ஆட்சி நெறிமுறைகள் மற்றும் சட்ட நெறி முறைகளுடன் கூடிய நிர்வாகம் வட்டார அளவில் பரவலாக நடைபெற்றுள்ளது என்பது தெரிய வருகிறது. அந்த நிர்வாக அமைப்பின் ஓர் அங்கமான வீரனே இந்நடுகல் வீரன் என்று கொள்வதில் தவறில்லை. அதாவது, அவன் ஒரு பணிமகனாக இருந்திருக்க வாய்ப்பில்லை. மாறாக, முறையான போர்ப்பயிற்சி பெற்றவர்கள் குடிகளுக்குத் தலைமைப் பகுதி வகித்த அல்லது குடி காவலராக இயங்கிய சமூக அமைப்பே அப்போது நிலவியிருக்க வேண்டும். அத்தகைய ஒரு சமூக அமைப்பில் குடிகாவலனாகச் செயல்பட்ட ஒரு வீரனே இந்நடுகல் வீரன் என்று நாம் புரிந்து கொள்ள முடியும்.

மாட்டு மந்தைகளே செல்வமாகவும் அறநெறிப்பட்ட வீரமே ஆண்மையின் இலக்கணமாகவும் கருதப்பட்ட அந்தக் காலகட்டத்தில் போரில் ஈடுபடும்போதுகூட, பசுக்கள், பிராமணர், பெண்டிர், நோயாளிகள் போன்றோர்க்கு ஊறு நேராத வகையில்தான் போரிட வேண்டும் என்ற விதி கடைப்பிடிக்கப்பட்டது. 'ஆவு மானியற் பார்ப்பன மாக்களும் பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித் தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும் பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும் எம்மம்பு கடிவிடுதும் நும் அரண் சேர்மின் என அறத்தாறு நுவலும் பூட்கை' என்ற புறநானூறு 9ஆம் பாடல் வரிகளே இதற்கான ஆதாரம் ஆகும். மாடுகளைக் கள்வர்கள் கவர்ந்து செல்வதென்பது 'வெட்சிப் போர் முறை' என்றும், மாடுகளைக் காப்பது அல்லது கள்வர்களிடமிருந்து மீட்பது என்பது 'கரந்தைப் போர் முறை' என்றும் வழங்கப்பட்டன. பழந்தமிழ் இலக்கணமாக தொல்காப்பியம் கரந்தைத் திணையுடன்தான் நடுகல் வழிபாட்டைத் தொடர்புபடுத்துகிறது. எனவே, இந்நடுகல்லில் குறிப்பிடப்படும் தீயன் அந்துவன் என்பவன் கூடலூரைச் சேர்ந்த ஆனிரை கவரும் வெட்சிப் போர் மரபினரிடமிருந்து ஆனிரைகளை மீட்கின்ற முயற்சியில் இறந்துள்ளான் என்பதையும், நாகரிக வாழ்க்கை நடைமுறைகளை நிர்ணயித்து நெறிப்படுத்தி நிர்வகித்த ஆட்சியாளர்கள் தமது நிர்வாகத்தின் ஓர் அங்கமாகிய படைப்பிரிவைச் சேர்ந்த தீயன் அந்தவனுக்கு (இவன் படைப்பிரிவின் ஒரு தலைவனாக இருக்கக்கூடும்) நடுகல் எடுத்துள்ளனர் என்பதையும் நாம் உணர்ந்துகொள்ளலாம்.

அந்தவன் என்பது இந்நடுகல் வீரனது பெயராகும். தீயன் என்பது இவனது குலமாக இருக்க வேண்டும். கூடலூர்ப் பகுதிக் கணவாய் மத்திய கேரளம் மற்றும் வட கேரளப் பகுதிகளைத் தமிழகத்துடன் இணைக்கும் கணவாய்களுள் ஒன்றாகும். கேரளத்தின் அப்பகுதிகளில் வாழ்வோருள் தீயர் என்று அழைக்கப்படுகின்ற ஈழவர் சமூகப் பிரிவினர் முதன்மையானவர் ஆவர். கி.பி. 10-12ஆம் நூற்றாண்டைய தமிழ்க் கல்வெட்டுகளில் 'தீயமாள்வான்' என்ற அடைமொழியுடன் சில வீரர்கள் குறிப்பிடப்படுகின்றனர். தீயம் என்பது த்வீபம் (தீவு) என்ற சொல்லின் தமிழ்த் திரிபாகக் கருதப்படுகிறது. ஈழத் தீவுக்கும் இக்குலப் பெயருக்கும் தொடர்பிருக்கக்கூடும். ஈழவர் சமூகத்தவர் ஈழத்தீவிலிருந்து குடியேறியவர்களா என்பது தனித்த ஆய்வுக்குரியது. இப்போதைய நிலையில் தீயர் என்போர் ஈழவர் குலப்பிரிவினர் எனக் கொள்வதில் தவறில்லை. வட கேரளத்திலுள்ள ஒரு மாவட்டப் பகுதியாகிய வயநாடு என்பது வயவர் நாடு என்பதன் சுருக்கமாகும். ஈழவர் சமூகத்தவரை வயவர் என்று அழைப்பது அப்பகுதியில் வழக்கம். எனவே இக்கல்வெட்டில் குறிப்பிடப்படும் அந்துவன், ஈழவர் சமூகப் பிரிவினனாகவே இருக்க வேண்டும். ஈழவர் சமூகத்தவர் போர்க்கலைப் பயிற்சியில் தேர்ந்தவர்கள் என்பதும் போர்க்கலையைக் கற்பிக்கும் ஆசான் மரபினர் என்பதும் வடக்கன் பாட்டுகள் என்கின்ற கேரள நாட்டின் பழமையான நாட்டுப் பாடல்களால் தெரிய வருகின்றன. ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு நாணயவியல் அறிஞர் தினமலர் இரா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் சிங்கத்துடன் போரிடும் வீரன் ஒருவனின் உருவம் பொறிக்கப்பட்ட ஒரு பழங் காசினைக் கண்டறிந்தார். அக் காசில் 'தீயன்' என்று பிராமி எழுத்துகளில் பொறிக்கப்பட்டிருந்ததையும் படித்து வெளியிட்டார். எனவே 'தீயன்' என்ற இக்குலப்பெயர் சங்ககாலத் தமிழரிடையே பரவலாக அறிமுகமான ஒரு பெயரே என்றும் போர்க்கலைப் பயிற்சியுடனும் வீரத்துடனும் அறப்போர் மரபுடனும் தொடர்புடைய ஒரு குலப் பெயராக இருந்துள்ளது என்றும் தெரிகின்றன.

இப்போது தமிழ்ச் சமூக வரலாறு குறித்த அடிப்படையான சில கேள்விகளைப் பரிசீலிப்போம். முதற்கேள்வி, தமிழகத்தில் க்ஷத்திரிய வருணம் அல்லது அரச குலம் என்ற ஒன்று இருந்துள்ளதா என்பதாகும். அடுத்து, அரச குலம் என்ற ஒரு குலம் இருந்தது என்று விடை கிடைத்தாலும் அக்குலம் எவ்வாறு உருவாயிற்று; பிற்காலத்தில் அக்குலம் என்ன ஆயிற்று என்ற கேள்விகள் எழுகின்றன. தீயர் சமூகத்தவரின் வரலாற்றை ஆழமாக ஆராய்ந்தால் இக் கேள்விகளுக்கு விடை கிடைக்க வாய்ப்புண்டு. மறப்போர்முறை என்பது பிறநாடுகளைக் கொள்ளையிடுவதற்கும், வென்று அடிமைப்படுத்துவதற்கும் எவ்வாறு பயன்பட்டதோ அது போன்றே தம் நாட்டின் குடிகளை ஆள்வதற்கும் காப்பதற்கும் அவர்களுக்குள் ஏற்படுகின்ற வழக்குகளையும் பூசல்களையும் தீர்ப்பதற்கும், அறப்போர் முறையில் தேர்ந்த நிர்வாகிகள் பயன்பட்டனர். 'தண்ட நீதி' எனப்படும் க்ஷத்திரிய நீதிமுறைக்கு[1] அடித்தளமாக அமைவன 'பிரஜானாம் பரிபாலனம்' என்ற குடிகாவல் முறையும், சரணடைந்தவர்களை எப்பாடுபட்டேனும் காக்கின்ற 'அபயதானம்' எனப்படும் வல்லமையும் ஆகும். எனவே, அறப் போர்முறை சார்ந்த பயிற்சிகளைக் கற்பிக்கின்ற குலமாக அறியப்படுகின்ற ஈழவர் குலம் பண்டைக்கால தென்னிந்தியச் சமூக வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த பங்கு ஆற்றியிருக்க வேண்டும் என்று நாம் ஊகிப்பது தவறாகாது. மதுரைக்கு அருகிலுள்ள திருப்பரங்குன்றத்தில் ஈழவர் சமூக மடத்திலுள்ள கி.பி. 17ஆம் நூற்றாண்டுச் செப்பேடு ஒன்றில்[2] செளந்தர பாண்டியன் என்ற பெயருடன் மதுரையை ஆண்ட சொக்கநாதப் பெருமானின் மாமன் மலையத்துவஜ பாண்டியனைத் தங்கள் குல முன்னோராக ஈழவர்கள் பெருமையுடன் குறித்து வைத்துள்ளனர். பாண்டியா என்ற பெயரில் மெகஸ்தனிஸ¤ம், மலையத்துவஜ பாண்டியனின் மகளான தடாதகைப்பிராட்டி அல்லது மீனாட்சி அம்மை என்று புராணங்களும் குறிப்பிடுகின்ற பெண்மணியைத் தமது குல மூதாதையாக ஈழவர் கருதியுள்ளனர் என்பது இதற்குப் பொருளாகும். இத்தகைய பிற்காலச் செய்திகளைத் தமிழ்ச் சமூக வரலாற்று ஆய்வுக்கு அடிப்படையான ஆதாரங்களாகக் கொள்வது எந்த அளவுக்குச் சரியானது என்ற கேள்வி எழுவது இயல்பு. வேறு பல சாதியினரின் செப்பேடுகளையும் ஆவணங்களையும் சேகரித்து, படித்து, தொகுத்து வெளியிட்டால் இந்த ஆராய்ச்சியை இன்னும் உயர்ந்த ஒரு தளத்துக்கு எடுத்துச் செல்ல முடியும். அதை நாம் எப்போது செய்யப் போகிறோம் என்பதுதான் முதன்மையான கேள்வி. அத்தகைய ஒரு ஆராய்ச்சி செய்யப்பட்டால் 21ஆம் நூற்றாண்டின் குறிப்பிடத்தக்க தொல்லியல்-சமூக வரலாற்றியல் நிகழ்வு என்று அதனைத் தயங்காமல் சுட்டிக்காட்டிப் பெருமிதம் கொள்ளலாம்.

இப்போது, மே 1ஆம் தேதி The Hindu இதழில் 'Discovery of a Century' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள, நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள செம்பியன் கண்டியூர் என்ற ஊரில் தற்செயலாகக் கண்டறியப்பட்ட இரண்டு செல்ட்டுகள் பற்றிய செய்தியைப் பரிசீலிப்போம். அவற்றுள் ஒரு செல்ட் கி.மு. 1500ஆவது ஆண்டைச் சேர்ந்தது என்றும் அதில் சிந்து சமவெளி எழுத்துக் குறியீடுகள் நான்கு பொறிக்கப்பட்டுள்ளன என்றும் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறைக் கல்வெட்டாய்வாளர்கள் அக் குறியீடுகளை அடையாளம் கண்டறிந்தனர் என்றும் அத்துறையின் சிறப்பு ஆணையர் திரு. டி. எஸ். ஸ்ரீதர் ஐ.ஏ.எஸ். குறிப்பிட்டுள்ளார். தமிழ் பிராமிக் கல்வெட்டுகளை ஐயத்துக்கு இடமற்ற வகையில் படித்துப் பொருள் விளக்கம் கூறி 'Early Tamil Epigraphy' என்ற தலைசிறந்த நூலை எழுதி வெளியிட்டுள்ள திரு. ஐராவதம் மகாதேவன் மேற்குறித்த செல்ட்டில் இடம்பெற்ற எழுத்துகள் கி.மு. 2000க்கும் கி.மு. 1500க்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தவையெனக் கணித்துள்ளார். மேலும், இக்கற் கருவி தென்னிந்தியாவில் உருவாக்கப்பட்ட கருவியே என்றும் சிந்து சமவெளியிலிருந்து கொண்டுவரப்பட்டதன்று என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். இக் கருவியிற் பொறிக்கப்பட்டுள்ள குறியீடுகளை ஒத்த சில வடிவங்கள் சிந்து சமவெளி சுடுமண் முத்திரைகளில் இடம் பெற்றுள்ளன என்றும் அவற்றைத் தாம் 'முருகன்' என்று படித்துள்ளதாகவும் திரு மகாதேவன் குறிப்பிட்டுள்ளார். அத்துடனன்றி, சிந்து சமவெளி நகரங்களில் வாழ்ந்த மக்களும் தமிழ் நாட்டில் வாழ்ந்த புதிய கற்காலப் பண்பாட்டு நிலை மக்களும் ஒரே மொழியைத்தான் பேசினர் என்றும் அம்மொழி திராவிடமாகத்தான் இருக்க முடியுமென்றும் இந்தோ-ஆரிய மொழியாக இருக்க முடியாது என்றும் உறுதிபடக் கூறியுள்ளார்.

இந்தக் கண்டுபிடிப்பு நாம் முன்னர் கண்ட பிராமி எழுத்துப் பொறித்த நடுகல்லை ஒத்ததன்று. நடுகல் கல்வெட்டு அகர வடிவ ஆதியான (ஓரொலிக்கு ஓரெழுத்து என்ற முறைப்படி அமைந்த) எழுத்துகளில் பொறிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய கற்கால செல்ட்டில் பொறிக்கப்பட்டிருப்பதாக மேற்குறித்த அறிஞர்கள் கருதும் வடிவங்கள் கருத்துகளின் குறியீடுகளாக அமைந்த சித்திர வடிவ எழுத்துகளாகும். இவை எழுதுகின்ற நோக்கில் பொறிக்கப்பட்ட எழுத்துகளா அல்லது தற்செயலாக விழுந்த கொத்துப் பொறிப்புகளா என்பதே ஐயமாக உள்ளது. இது கி.மு. 1500ஆம் ஆண்டைச் சேர்ந்த புதிய கற்கால செல்ட் என்பது ஏற்கத்தக்கதே. வட தமிழகத்தில் சில பகுதிகளில் இத்தகைய கற்கருவிகள் ஏராளமான அளவில் கண்டறியப்பட்டுள்ளன. இவை பயன்படுத்தப்பட்ட நாகரிக நிலையெல்லாம் இறந்த காலமாகப் போய்விட்ட பிறகு இன்றைக்கு சுமார் 1500 அல்லது 2000 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சைப் பகுதிக்கு இக்கற்கருவி கொண்டுவரப்பட்டுப் பொற்கொல்லர் போன்ற நுட்பமான பணி செய்வோரால் அடைகல்லாக (Anvil) பயன்படுத்தப்பட்டிருக்கலாம். அப்போது விழுந்த கொத்துகளாக இவை இருக்கவும் வாய்ப்புண்டு. இவற்றை எழுதுகிற நோக்கில் பொறிக்கப்பட்ட கருத்துக் குறியீட்டுச் சித்திர எழுத்துகள் என்பது ஐயத்துக்கிடமின்றி நிரூபிக்கப்பட்டாலும் கூட, புதிய கற்காலப் பண்பாட்டு நிலைக்கும் இத்தகைய பொறிப்பு எழுத்துகளுக்கும் தொடர்பு இருந்தது எனக் கொள்வதற்கான வாய்ப்பு அறவே இல்லை. ஹரப்பன் நாகரிகத்தோடு தொடர்புடைய நகரங்கள் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அகழ்ந்து கண்டறியப்பட்டுள்ளன. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற இந்தியாவின் வடமேற்குப் பகுதி நாடுகளிலும், இந்தியாவின் மஹாராஷ்டிரா மாநிலம் வரையிலும் விரிந்து பரந்திருந்த ஒரு நாகரிகம் ஹரப்பன் நாகரிகமாகும். இந்நாகரிகம் அழிந்ததற்கான காரணங்கள் இன்று வரை தெளிவுபடுத்தப்படவில்லை. என்றாலும் கூட, கி.மு. 1700 அளவில் ஒரே சமயத்தில் இந்நாகரிகம் அழிந்திருக்கவேண்டும் என்று தொல்லியல் அறிஞர்கள் முடிவு செய்துள்ளனர்.

கற்கருவிகளையும், செம்புக் கருவிகளையும் பயன்படுத்திய நாகரிகம் (Chalco-lithic Civilisation) என்று இதனைக் குறிப்பிடுவது வழக்கம். இரும்பை உருக்கி எடுக்கும் தொழில்நுட்பத்தை அவர்கள் அறிந்திருக்கவில்லை. எனவே, கட்டுமானப் பணிகளுக்குத் தேவைப்படுகின்ற உறுதியான மரங்களை வெட்டுதல் போன்ற பணிகளுக்கு அவர்கள் கற்கோடரிகளையே கழிகளில் பொருத்திப் பயன்படுத்தினர். செம்பு மற்றும் செம்பு சார்ந்த உலோகக கலவைகளால் ஆன பல கருவிகளையும் வேறு பல பணிகளுக்காக அவர்கள் பயன்படுத்தினர். அதே வேளையில் அந்நாகரிகம் ஒரு நகர்ப்புற நாகரிகம். பல்வேறு விதமான படிநிலைகள் கொண்ட சமூக அமைப்பினையும், ஒருவிதமான அடிமை முறையையும் ஆதாரமாகக் கொண்டே அந்த நாகரிகம் இயங்கியது. அதற்கெனத் தெளிவான இலக்கணங்களுடன் கூடிய எழுத்து முறை இருந்தது என்பது தெரிய வருவதால் எழுத்து வடிவிலான சட்டங்கள் நிர்வாக நடைமுறை போன்றவையும் அவை சார்ந்த கல்வி முறையும் அங்கு வழக்கத்திலிருந்திருக்க வேண்டும். பிற வெளிநாடுகளுடன் வணிகத்தொடர்புகள் இருந்துள்ளன. அரசு என்ற அமைப்பு இருந்தால்தான் இவையெல்லாம் சாத்தியம். ஆனால், புதிய கற்கால நாகரிகம் என்பது கி.மு. இரண்டாயிரம் முதல் கி.மு. ஆயிரம் வரை தென்னிந்தியாவில் நடைமுறையிலிருந்த பண்பாட்டு நிலையாகும். புதிய கற்காலப் பண்பாட்டு நிலையிலிருந்த மக்கள் சமூகத்தவரிடையே ஒருவிதமான பழங்குடிச் சமூகக் குடியரசு இருந்திருக்க வாய்ப்புண்டு. ஆனால், ஊர் என்று குறிப்பிடத்தக்க நிரந்தரக் குடியிருப்புகளோ சொத்து எனக் குறிப்பிடத்தக்க நில உடைமையோ இல்லாத பண்பாடு நிலை அது. அக்கால கட்டத்தில் நதி நீர்ப்பாசன வசதிகளோ நில வருவாய் நிர்வாக அமைப்புகளோ இருந்தன என ஊகிக்பதற்குரிய தடயங்களோ, காரண காரிய அடிப்படையோ எவையும் இல்லை. நெருப்பின் பயன்பாட்டினை அவர்கள் அறிந்திருந்தனர் என்பது உண்மை. விலங்குகளின் தோலையும், இலை தழைகளையுமே அவர்கள் ஆடையாக உடுத்தியிருக்க வேண்டும். பருத்தியின் பயன்பாட்டை அவர்கள் அறிந்திருந்தனர் என்றோ நெசவுக் கருவிகள் பயன்பட்டில் இருந்தன என்றோ சொல்வதற்கு எந்த அடிப்படையும் ஆதாரத் தடயமும் இல்லை. மாடுகளை அவர்கள் வீட்டு விலங்குகளாகப் பழக்கத் தொடக்கி விட்டனர் எனத் தெரிகிறது. புதர்களைக் கொளுத்திவிட்டு அந்தச் சாம்பலையும் மாட்டுச் சாணத்தையும் உரமாகப் பயன்படுத்தி நேரடியாக மழையைப் பயன்படுத்தி பயிர்செய்யும் மானாவாரி (வானமாரி?) விவசாயத்தை அவர்கள் அறிந்திருந்தனர்.

மாடுகள் பொதி சுமக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். ஆனால், உழவுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், ஏர்க்கலப்பை என்பது அவர்கள் அறியாத ஒன்றாகும். நிலத்தைக் கிண்டிக் கிளறிச் செய்யப்படும் களைக்கொட்டு வேளாண்மை என்று சொல்லக்கூடிய விவசாய முறையையே அவர்கள் பயன்படுத்தினர். அதற்கு அவர்கள் பயன்படுத்திய கருவிக்கு தமிழில் என்ன பெயர் என்று ஆராய்ந்தால் ஒரு சில குறிப்புகள் கிடைக்கின்றன. கணிச்சி என்ற ஒருவித ஆயுதத்தை ஏந்திய கூற்று என்ற தெய்வம் காளையை வென்ற தெய்வம் என்றும், எருமையைக் கொன்ற தெய்வம் என்றும் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இதில் எருமையைக் கொன்ற தெய்வம் என்ற படிமம் கொற்றவை என்ற பெண் தெய்வத்துக்கு உரியதாக்கப்பட்டு அத் தெய்வம் திகிரி என்ற வளைதடியை ஏந்திய தெய்வமாக பிற்காலச் சிற்ப மரபில் சித்திரிக்கப்பட்டது. ஆனால், கொற்றவையின் ஆண் வடிவமாகிய கூற்று என்ற ஆண் தெய்வமோ, காளையைக் கொல்லாமல் வென்று அடிமைப்படுத்தியதோடு, கணிச்சி என்ற ஆயுதத்தையும் ஏந்திய தெய்வமாக இலக்கியங்களில் குறிப்பிடப்படுவதற்கேற்பப் பிற்காலச் சிற்ப மரபில் காளையைக் கொடியாகவோ அல்லது வாகனமாகவோ ஏற்றுக் கொண்டும், மழு என்ற கோடரியை ஆயுதமாகக் கொண்டும் விளங்குகின்ற சிவனாகச் சித்திரிக்கப்பட்டது. மழு என்பது பயன்பாட்டு அளவில் பார்த்தால் கணிச்சியுடன் தொடர்புடையதன்று. மழுவினைக் கோடரி என்று கொள்ளலாம். கணிச்சி என்பது நிலத்தைத் தோண்டுவதற்கும் பயன்பட்ட ஓர் ஆயுதமென்பது சங்க இலக்கியங்களில் தெளிவுபடக் குறிப்பிடப்பட்டுள்ளது. சமஸ்கிருதத்தில், கணித்ர என்ற சொல் இதனோடு தொடர்புடையாதகத் தோன்றுகிறது. கணித்ரிமா என்ற சமஸ்கிருதச் சொல் கணித்ர என்ற கருவியால் தோண்டப்பட்டது என்ற பொருளில் கிணற்றைக் குறிக்கும். எனவே சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படும் கணிச்சி என்ற உலோகக் கருவியின் பூர்வ வடிவம் கூற்றுத் தெய்வத்தின் கையில் இடம் பெற்றிருந்த நிலத்தைத் தோண்டுவதற்கும் வேட்டைக்கும் பயன்படுத்தப்பட்ட கருவியே ஆகும். இதுதான் புதிய கற்கால செல்ட்டாக இருக்க வேண்டும்[3].

உலோகத்தின் பயன்பாட்டை அறிந்திராத புதிய கற்காலப் பண்பாட்டு நிலை மக்கள் வேட்டையாடுதல் - உணவு சேகரித்தல் என்ற நிலையிலிருந்து சற்று முன்னேறிப் பழங்குடி வேளாண்மை என்று சொல்லக்கூடிய ஒரு நிலையை எட்டியிருந்தனர். இவர்களால் சாம்பல் நிற மட்பாண்டங்கள் (Grayware) பயன்படுத்தப்பட்டன. இப்பண்பாட்டின் இறுதிக் கட்டத்தில்தான் சக்கரம் போன்ற ஓரமைப்பின் மூலம் மட்பாண்டம் வனைந்து அதனை நெருப்பில் சுட்டுப் பதப்படுத்திப் பயன்படுத்தும் அறிவு முதிர்ச்சி ஏற்பட்டது. மொத்தத்தில் இம்மக்கள் முன்னேறிய சமூகத்தவருடன் நெருக்கமான உறவுகளோ பொருள் பரிவர்த்தனையோ வைத்துக் கொண்டார்கள் என்று சொல்வதற்கில்லை. அப்படி இருக்க, இவர்களையும், ஹரப்பன் நாகரிக மக்களையும் ஒரே நாகரிக நிலை என்ற தட்டில் வைத்துப் பார்ப்பது பொருத்தமற்றது. ஹரப்பன் நாகரிகக் காலகட்டத்தைச் சேர்ந்த வாழ்விடம் என்று சொல்லத்தக்க கட்டடச் சிதைவுகள் எவையுமே தென்னிந்தியாவில் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இதனை நாம் இங்கு குறிப்பிடுவதன் நோக்கம் ஹரப்பன் நாகரிகம் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த தொன்மையான ஒரு மொழியைப் பேசிய மக்கள் தொகுதியினரின் நாகரிகமாகவே இருக்க வாய்ப்புள்ளது என்ற உண்மையை மறுப்பதற்காக அல்ல. இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சார்ந்த ஒரு தொன்மையான மொழியை ஹரப்பன் நாகரிக மக்கள் பேசியிருக்க வாய்ப்பில்லை என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். இன்றைக்குத் தமிழ்நாடு என்று வழங்கப்படுகிற நிலப்பகுதியுடன் ஹரப்பன் நாகரிகத்தை இணைக்கின்ற ஓர் அவசரக் கோல முயற்சியில் தொல்லியலாளர்கள் மற்றும் கல்வெட்டாய்வாளர்கள் இறங்கும்போதுதான் இதில் பிரச்சினை எழுகின்றது. திராவிட மொழிகள் என்ற சொல்லாட்சி கி.பி. 1819இல் சென்னையில் மாவட்ட ஆட்சியராக இருந்த 'பிரான்சிஸ் வைட் எல்லிஸ்' என்பவரால் உருவாக்கப்பட்டதாகும். தமிழ் என்ற சொல்லின் சமஸ்கிருதத் திரிபாகிய த்ரமிடம் அல்லது த்ராவிடம் என்ற வழக்கு தமிழ் மொழியை முதன்மையான உறுப்பினராகக் கொண்ட ஒரு மொழிக் குடும்பத்தைக் குறிப்பிடுகிறது என்பதில் ஐயமில்லை. ஹரப்பன் பண்பாட்டு மக்களிடையே இம் மொழிக் குடும்பத்தைச் சார்ந்த ஒரு தொன்மையான மொழிதான் வழங்கியிருக்க வேண்டும் என்பதும் வலிமையான ஒரு கருத்தே. ஆனால், அம் மொழியின் பெயர் திராவிடம் என்றோ தமிழ் என்றோ இருந்திருக்க முடியாது. அம் மொழியின் பெயர் என்ன; சொற்கள், சொற்றொடர்க் கட்டுமானங்கள், அவற்றிற்கான இலக்கணங்கள் ஆகியவற்றை நாம் எவ்வாறு புலனாய்ந்து கண்டுபிடித்து மறுநிர்மாணம் செய்யப் போகிறோம் என்பன போன்ற மிகப் பெரிய சவால்கள் நம்முன் எழுகின்றன. இவற்றையெல்லாம் நாம் எதிர்கொள்ள வேண்டிய தொடக்க நிலையில் இருக்கின்றோம். அப்படி இருக்க, இப்பொழுதே ஹரப்பன் சித்திர வடிவ குறியீடுகளுக்கு பொருள் விளக்கம் கூறி அவற்றைத் தமிழகத்தில் கண்டறியப்பட்ட கற்காலக் கருவியில் உள்ள சில கொத்துப் பொறிப்புகளுடன் தொடர்புபடுத்துவது என்பது சரியான ஆய்வு நெறிமுறையின் பாற்பட்டதாகுமா? முருகு என்ற தெய்வத்தின் அடையாளக் குறியீடாகக் கருதி வழிபடப்பட்ட ஆயுதம் 'வேல்' ஆகும். அது உலோகக் கருவியாக இருப்பதற்கு வாய்ப்புண்டு. கற்கருவியாகிய கணிச்சியுடனோ பழங்குடி வேளாண்மையுடனோ முருகு என்ற தெய்வத்தைத் தொடர்புபடுத்துவதில் ஏதாவது நியாயம் இருக்கிறதா? புதிய கற்காலக் கருவியில், அப்பண்பாடு நிலவிய காலகட்டத்திலேயே கற்கருவிகளைக் கொண்டு இந்த எழுத்து பொறிக்கப்பட்டிருக்கலாம் என்ற கண்ணோட்டத்தின் அடிப்படையில் இவ்வாறு காலநிர்ணயம் செய்யப்பட்டிருக்குமானால் அது வரலாற்றின் வளர்ச்சிப் போக்குக்கு முற்றிலும் முரணான ஒரு விஷயமாக அல்லவா இருக்கிறது? அவ்வாறன்றித் தமிழகத்தில் இரும்பு யுகம் அறிமுகமான காலகட்டம் என்று உத்தேசமாகக் கணிக்கப்படுகின்ற கி.மு. 9-8ஆம் நூற்றாண்டளவில் இரும்பு, ஆணி அல்லது உளி கொண்டு இவ்வாறு பொறிக்கப்பட்டிருக்கலாம் என்ற கண்ணோட்டத்தின் அடிப்படையில் இக்கருத்து கூறப்பட்டிருப்பதாக நாம் பொருள் கொண்டாலும் செம்பு-கற்கருவிப் பண்பாடாகிய ஹரப்பன் பண்பாட்டுக்கும் இரும்பு யுகம் எனப்படுகின்ற பெருங்கற்படைக் காலப் பண்பாட்டுக்கும், பண்பாட்டு மட்டத்திலும் கால அடிப்படையிலும் பெருத்த வேறுபாடுகள் உள்ளனவே - அவற்றை எப்படி இட்டு நிரப்புவது? இவை போன்ற அடிப்படையான பல கேள்விகளை ஆய்வாளர்கள் முன்னிலையில் நாம் எழுப்ப விழைகிறோம்.

சில ஆலோசனைகள்

ஹரப்பன் நாகரிகத்தவரால் பயன்படுத்தப்பட்ட எழுத்து முறையைப் பற்றியும் அவர்களிடையே வழங்கிய மொழி பற்றியும் ஆய்வு செய்வதற்கு முனைபவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு முதன்மையான அறிவுரையை செக்கோஸ்லோவேக்கிய நாட்டுத் தமிழியல் அறிஞர் கமில் சுவலபில் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். அகழ்வாய்வுகளின் மூலமும் தர்க்கவியல் அடிப்படையில் அமைந்த ஊகங்களின் மூலமும் ஹரப்பன் மக்களால் பயன்படுத்தப்பட்ட பல்வேறு பொருள்களைப் பற்றிய விவரங்கள் நமக்குக் கிடைத்துள்ளன. அப்பொருள்களின் பழம்பெயர்கள் என்ன என்பதைக் கண்டறிந்து மொழியியல் அடிப்படையில் அப்பெயர்களை மறுநிர்மாணம் செய்வதில் அறிஞர்கள் ஈடுபடலாம் என்று கமில் சுவலபில் ஆலோசனை தெரிவித்துள்ளார்[4]. அவருடைய அந்த ஆலோசனையைப் பின்பற்றிக் கீழ்வரும் கருதுகோள் நம்மால் அறிஞர்களின் பரிசீலனைக்கு வைக்கப்படுகிறது:

சங்க இலக்கியங்களில் நாஞ்சில் என்ற உழுகருவி குறிப்பிடப்படுகிறது. இது ஏர்க்கலப்பையையே குறிப்பிடுகிறது என்றாலும் இரும்புக் கொழு பொருத்திப் பயன்படுத்தப்பட்ட ஏர்க்கலப்பை வடிவத்துடன் பிற்காலத்தில் கலந்து ஒன்றிப்போன ஒரு பழமையான உழுகருவியே நாஞ்சில் எனத் தெரிகிறது. நமது ஊகத்துக்கு அடிப்படையாக அமைவது 'நாஞ்சில் படையோன்' எனக் குறிப்பிடப்படும் பலராமன், இரும்பு யுகத்துக்கு முற்பட்ட செம்பு-கற்கால நாகரிகத்தவன் என்றும் தனது நாஞ்சிலை மாடுகளில் பூட்டி உழுவதற்குப் பதிலாகத் தன் கைகளாலேயே பயன்படுத்தினான் என்றும் நாம் பொருள்படுத்துவதற்கான சில குறிப்புகள் புராணங்களில் காணப்படுவதுதான்[5]. நாஞ்சில் என்ற இச்சொல் நாங்கிர் என்று மராட்டிய மொழியிலும் நாகலி எனத் தெலுங்கிலும் நேகிலு எனக் கன்னடத்திலும் லாங்கல என சமஸ்கிருதத்திலும் வழங்கப்படுகிறது. தமிழ் நிகண்டுகள் நாஞ்சில் என்ற சொல்லுக்கு ஏர்க்கலப்பை என்ற பொருளையும் மதிலுறுப்பு என்ற பொருளையும் குறிப்பிடுகின்றன. மதிலுறுப்பு என்பது கற்கோட்டைகளின் பிரம்மாண்டமான வாயிற்கதவுகளை மூடிய பின்னர் குறுக்கே அணைத்து இடப்படும் வலிமையான மரக்கட்டை என்று பொருள்படக்கூடும். ஏனென்றால், இன்றைக்கும் கோயிற் கோபுரங்களின் வாயிற்கதவுகளை மூடிய பின்னர் கதவுகளின் பின்புறம் இடப்படும் மர உத்தரங்களை நாங்கில் மரம் எனப்படும் சில்வர் ஓக் மரங்களால் செய்து இடும் வழக்கம் உள்ளது. இதற்கு நாங்கில் மரத்தைத் தேர்வு செய்ததன் நோக்கம் தற்போதைய தச்சாசாரிமார்களுக்குக் கூடத் தெரிவதில்லை. ஆனால், இம்மரம் அதிர்வுகளைத் தாக்குப் பிடித்து வளைந்து கொடுத்து எதிர்த்து நிற்கக் கூடியவை என்றும், அதே நேரத்தில் கனம் குறைந்தவை என்பதால் எளிதில் சுமந்து செல்ல முடியும் என்றும் தச்சாசாரிமார்கள் கூறுகின்றனர். பழங்காலத்தில் கோட்டை வாயிற் கதவுகள் எதிரி அரசர்களின் யானைகளால் தாக்கப்படும்போது, அந்தத் தாக்குதலை எதிர்த்துத் தாக்குப் பிடிப்பதற்காக நாங்கில் மரத்தைப் பயன்படுத்தி இருக்கலாம். சுமப்பதற்கு எளிது என்பதால் மனிதர்களே தம் கைகளால் இதனை உழுகருவியாகப் பயன்படுத்தி நிலத்தை உழுதிருக்க வாய்ப்புண்டு. நாங்கில் மரங்கள் படகுகள் கட்டுவதற்கும் பயன்படுத்தப்படுவதுண்டு என்று தச்சர்கள் குறிப்பிடுகின்றனர். பலராமன் 'லாங்கல' என்ற தன் ஆயுதத்தால் யமுனை ஆற்றை இழுத்து வந்தான் என்ற குறிப்பு புராணங்களில் காணப்படுகிறது. இது நதி நீர்ப்பாசன முயற்சிகளைக் குறிக்கும் என நாம் புரிந்துகொள்ள இயல்கிறது. சிந்து நதி பாய்ந்த செழிப்பான நிலப்பகுதிகளில் வாய்க்கால்கள் வெட்டி நீரைத் தேக்கி விவசாயம் செய்து வாழ்ந்த ஹரப்பன் பண்பாட்டு மக்கள் கைகளின் உதவியுடன் நிலத்தை உழுகிற நீண்ட கழிகளையே உழுகருவிகளாகப் பயன்படுத்தி இருக்க வேண்டும் என்பது தொல்லியல் அறிஞர்களின் முடிபு ஆகும். மேலும், ஹரப்பன் பண்பாட்டு காலகட்டத்தைச் சேர்ந்த 'லோதல்' போன்ற துறைமுகங்களில் கப்பல்களும் படகுகளும் கட்டும் பணிகள் பெருமளவில் நடந்திருக்க வேண்டும். இத்தகைய பணிகளுக்கெல்லாம் நாங்கில் மரம் பெரிதும் பயன்பட்டிருக்க வாய்ப்புண்டு. நாங்கில் என்ற சொல் கூட ஹரப்பன் மொழியில் வழங்கியிருக்கலாம்.

இது தொடர்பாக நாம் கூற விரும்புகின்ற ஆலோசனை என்னவென்றால், ஹரப்பன் எழுத்து பொறிப்புகளைப் படித்துப் பொருள் விளக்கம் அளிக்கின்ற முயற்சியில் முதன்மையாக ஈடுபட வேண்டியவர்கள் பன்மொழிப் புலமை வாய்ந்த அறிஞர்களும், திராவிட மொழியியல் அறிஞர்களும் ஆவர். இவர்களுக்குத் தொல்லெழுத்தியல் (Palaeography) பற்றிய பரிச்சயம் தேவை. இவர்களுடன் தொல்லியல் அறிஞர்களும், கல்வெட்டு அறிஞர்களும், மானிடவியல், சமூகவியல் அறிஞர்களும் இணைந்து முயற்சி மேற்கொண்டாலன்றி ஹரப்பன் எழுத்துகளைப் படித்துப் பொருள் விளக்கம் சொல்வதென்பது 'சித்தம் போக்கு சிவன் போக்கு' என்று நிலைக்குத்தான் இட்டுச் செல்லும்[6].

அடிக்குறிப்புகள்:

[1] "நேமியளவும் வழங்கிய ஈழ தண்டம்" என்ற தொடர் தமிழிலக்கிய உரையாசிரியர்கள் சிலரால் குறிப்பிடப்பட்டுள்ளது. ஈழவர் தண்ட நீதி என்பது 'சான்றவர் சிரம நீதி' என்று வேம்பத்தூரார் திருவிளையாடல் புராணத்தில் அங்கம் வெட்டிய படலத்தில் குறிப்பிடப்படும் போர்க்குடியினரின் நீதிமுறையோடு ஒத்ததாக இருக்கலாம். அரச குலத்தவர் இருவருக்குள் சொத்துரிமை குறித்து நேர்கின்ற வழக்கினைத் தீர்க்க முடியாத நிலை தோன்றினால் அங்கப் போர் முறையின் மூலம் அவ்வழக்கு தீர்க்கப்படும். இது போன்ற தண்ட நீதி முறைகள் இலங்கையில் வழக்கில் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. பார்க்க: 'South India and Sri Lanka' by K.K. Pillay, Madras University, 1975 - pp. 168-170.

[2] இச்செப்பேடு சுமார் 20 ஆண்டுகளுக்கும் முன்பு தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையின் மதுரை பதிவு அலுவலர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டது. தற்போது சென்னையிலுள்ள அத்துறைத் தலைமை அலுவலத்தில் பாதுகாக்கப்படுகிறது. இச்செப்பேட்டின் வாசகங்கள் இன்னமும் வெளியிடப்படவில்லை. திருப்பரங்குன்றம் மலையில் பொறிக்கப்பட்டுள்ள கி.மு. முதல் நூற்றாண்டாகக் கருதப்படும் ஒரு கல்வெட்டில் 'அந்துவன்' என்ற ஆட்பெயர் குறிப்பிடப்படுகிறது. (p. 319, Early Tamil Epigraphy, Iravatham Mahadevan, Cre-A, Chennai, India, 2003) அதே மலையில் கி.பி. முதல் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிற "எருகாடூர் இழகுடும்பிகன் (ஈழக் குடும்பிகன்) போலாலையன்" என்பவனின் பெயர் குறிப்பிடப்படுகிறது. மதுரை ஈழத்துப் பூதன் தேவனார் (மதுரையிலிருந்த ஈழவர் சேரியைச் சேர்ந்த பூதன் தேவனார்) என்ற புலவர் பெயர் சங்க இலக்கியப் புலவர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. அந்துவன் அல்லது அந்தவன் என்ற ஆட்பெயர் மதுரைப் பகுதியில் பரவலாக வழங்கியுள்ளது என்பதையும் ஈழவர் சமூகத்தவர்கள் குறிப்பிடத்தக்க சமூக அந்தஸ்துடன் வாழ்ந்துள்ளார்கள் என்பதையும் இக்குறிப்புகளால் தெளிவாக உணர முடிகிறது.

[3] கொற்றவை என்ற பெண் தெய்வமே வெட்சிப் போர் மரபினராகிய வேட்டைக்குடியினரின் தெய்வமாகும். இத் தெய்வம் late palaeolithic civilisation எனத் தொல்லியல் பரிபாஷையில் வழங்கப்படுகிற, பழைய கற்காலத்தில் பிற்பட்ட பண்பாட்டு நிலையைச் சார்ந்த எயினர், கள்வர் போன்ற குலத்தவர்களின் வாழ்க்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திற்று என்று கொள்ளலாம். மாறாக, கூற்று என்ற ஆண் தெய்வம், வெட்சிப் போர் மரபிலிருந்து முன்னேறி, தொடக்க நிலை விவசாய முயற்சிகளை மேற்கொண்ட மள்ளர் (பள்ளர்) குலத்தவரைப் பிரதிநிதித்துவப்படுத்திற்று எனலாம்.

[4] 'சிந்து வெளி - அண்மைக்கால முயற்சிகள்' என்ற தலைப்பில் கமில் சுவலபில் அவர்களின் ஆய்வுக் கட்டுரை என்னால் மொழிபெயர்க்கப்பட்டு, சென்னை ஆய்வு வட்டம் வெளியிட்டுள்ள 'ஆய்வு வட்டக் கட்டுரைகள்' முதல் தொகுதியில் வெளிவந்துள்ளது.

[5] Velir: Were they the Velalars? - S. D. Nellai Nedumaran and S. Ramachandran. A paper presented at the XXIV annual Congress of the Epigraphical Society of India, Trissur, Kerala, 15th-17th May, 1998.

[6] இந்தியத் தொல்லியல் துறை தொல்லியல் கண்காணிப்பாளர் (ஓய்வு) திரு. தியாக. சத்தியமூர்த்தி அவர்களுடன் இணைந்து இது தொடர்பான முயற்சிகள் என்னால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

maanilavan@gmail.com

10 comments:

VILMEENKODI said...

வில்லவர் மற்றும் பாணர்
____________________________________

பாண்டிய என்பது வில்லவர் மற்றும் பாண ஆட்சியாளர்களின பட்டமாகும். இந்தியா முழுவதும் பாணர்கள் அரசாண்டனர். இந்தியாவின் பெரும்பகுதி பாண ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது. இந்தியா முழுவதும் பாண்பூர் எனப்படும் ஏராளமான இடங்கள் உள்ளன. இவை பண்டைய பாணர்களின் தலைநகரங்கள் ஆகும். பாணர்கள் பாணாசுரா என்றும் அழைக்கப்பட்டனர்.

கேரளா மற்றும் தமிழ்நாட்டை ஆண்ட வில்லவரின் வடக்கு உறவினர்கள் பாணர்கள் ஆவர். கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் பாணர்கள் ஆண்டனர்.

வில்லவர் குலங்கள்

1. வில்லவர்
2. மலையர்
3. வானவர்

வில்லவரின் கடலோர உறவினர்கள் மீனவர் என்று அழைக்கப்பட்டனர்

4. மீனவர்

பண்டைய காலங்களில் இந்த அனைத்து துணைப்பிரிவுகளிலிருந்தும் பாண்டியர்கள் தோன்றினர். அவர்கள் துணை குலங்களின் கொடியையும் பயன்படுத்தினர். உதாரணத்திற்கு

1. வில்லவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் சாரங்கத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் ஒரு வில் மற்றும் அம்பு அடையாளமுள்ள கொடியை சுமந்தார்.

2. மலையர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் மலையத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் மலை சின்னத்துடன் ஒரு கொடியை ஏந்தினார்.

3. வானவர் துணைப்பிரிவைச் சேர்ந்த பாண்டியன் ஒரு வில்-அம்பு அல்லது புலி அல்லது மரம் கொடியை ஏந்திச் சென்றார்.

4. மீனவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் ஒரு மீன் கொடியை ஏந்திச்சென்று தன்னை மீனவன் என்று அழைத்துக் கொண்டார்.

பிற்காலத்தில் அனைத்து வில்லவர் குலங்களும் ஒன்றிணைந்து நாடாள்வார் குலங்களை உருவாக்கின. பண்டைய மீனவர் குலமும் வில்லவர் மற்றும் நாடாள்வார் குலங்களுடன் இணைந்தது.


பிற்காலத்தில் வடக்கிலிருந்து குடிபெயர்ந்த நாகர்கள் தென் நாடுகளில் மீனவர்களாக மாறினர். அவர் வில்லவர்-மீனவர் குலங்களுடன் இனரீதியாக தொடர்புடையவர் அல்லர்.

வில்லவர் பட்டங்கள்
______________________________________

வில்லவர், நாடாள்வார், நாடார், சான்றார், சாணார், சண்ணார், சார்ந்நவர், சான்றகர், சாண்டார் பெரும்பாணர், பணிக்கர், திருப்பார்ப்பு, கவரா (காவுராயர்), இல்லம், கிரியம், கண நாடார், மாற நாடார், நட்டாத்தி, பாண்டியகுல ஷத்திரியர் போன்றவை.

பண்டைய பாண்டிய ராஜ்யம் மூன்று ராஜ்யங்களாகப் பிரிக்கப்பட்டது.

1. சேர வம்சம்.
2. சோழ வம்சம்
3. பாண்டியன் வம்சம்

அனைத்து ராஜ்யங்களையும் வில்லவர்கள் ஆதரித்தனர்.

முக்கியத்துவத்தின் ஒழுங்கு

1. சேர இராச்சியம்

வில்லவர்
மலையர்
வானவர்
இயக்கர்

2. பாண்டியன் பேரரசு

வில்லவர்
மீனவர்
வானவர்
மலையர்

3. சோழப் பேரரசு

வானவர்
வில்லவர்
மலையர்

பாணா மற்றும் மீனா
_____________________________________

வட இந்தியாவில் வில்லவர் பாணா மற்றும் பில் என்று அழைக்கப்பட்டனர். மீனவர், மீனா அல்லது மத்ஸ்யா என்று அழைக்கப்பட்டனர். சிந்து சமவெளி மற்றும் கங்கை சமவெளிகளில் ஆரம்பத்தில் வசித்தவர்கள் பாணா மற்றும் மீனா குலங்கள் ஆவர்.

பாண்டவர்களுக்கு ஒரு வருட காலம் அடைக்கலம் கொடுத்த விராட மன்னர் ஒரு மத்ஸ்யா - மீனா ஆட்சியாளர் ஆவார்.

பாண மன்னர்களுக்கு அசுர அந்தஸ்து இருந்தபோதிலும் அவர்கள் அனைத்து சுயம்வரங்களுக்கும் அழைக்கப்பட்டனர்.

அசாம்

சோனித்பூரில் தலைநகருடன் அசுரா இராச்சியம் என்று அழைக்கப்பட்ட ஒரு பாண இராச்சியம் பண்டைய காலங்களில் அசாமை ஆட்சி செய்தது.

இந்தியா முழுவதும் பாணா-மீனா மற்றும் வில்லவர்-மீனவர் இராச்சியங்கள் கி.பி .1500 வரை, நடுக்காலம், முடிவடையும் வரை இருந்தன.

மஹாபலி

பாணர் மற்றும் வில்லவர் மன்னர் மகாபலியை தங்கள் மூதாதையராக கருதினர். மகாபலி பட்டத்துடன் கூடிய ஏராளமான மன்னர்கள் இந்தியாவை ஆண்டனர்.

வில்லவர்கள் தங்கள் மூதாதையர் மகாபலியை மாவேலி என்று அழைத்தனர்.

ஓணம் பண்டிகை

ஓணம் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் கேரளாவை ஆண்ட மகாபலி மன்னர் திரும்பி வரும் நாளில் கொண்டாடப்படுகிறது. மாவேலிக்கரை, மகாபலிபுரம் ஆகிய இரு இடங்களும் மகாபலியின் பெயரிடப்பட்டுள்ளன.

பாண்டியர்களின் பட்டங்களில் ஒன்று மாவேலி. பாண்டியர்களின் எதிராளிகளாகிய பாணர்களும் மாவேலி வாணாதி ராயர் என்று அழைக்கப்பட்டனர்.

சிநது சமவெளியில் தானவர் தைத்யர்(திதியர்)

பண்டைய தானவ (தனு=வில்) மற்றும் தைத்ய குலங்கள் சிந்து சமவெளியிலுள்ள பாணர்களின் துணைப்பிரிவுகளாக இருந்திருக்கலாம். தைத்யரின் மன்னர் மகாபலி என்று அழைக்கப்பட்டார்.

இந்தியாவில் முதல் அணைகள், ஏறத்தாழ நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்து நதியில் பாண குலத்தினரால் கட்டப்பட்டன.

ஹிரண்யகர்பா சடங்கு

வில்லவர்கள் மற்றும் பாணர் இருவரும் ஹிரண்யகர்பா விழாவை நிகழ்த்தினர். ஹிரண்யகர்பா சடங்கி்ல் பாண்டிய மன்னர் ஹிரண்ய மன்னரின் தங்க வயிற்றில் இருந்து வெளிவருவதை உருவகப்படுத்தினார்.
ஹிரண்யகசிபு மகாபலியின் மூதாதையர் ஆவார்.

VILMEENKODI said...

வில்லவர் மற்றும் பாணர்

நாகர்களுக்கு எதிராக போர்
__________________________________________

கலித்தொகை என்ற ஒரு பண்டைய தமிழ் இலக்கியம் நாகர்களுக்கும் வில்லவர் -மீனவர்களின் ஒருங்கிணைந்த படைகளுக்கும் இடையே நடந்த ஒரு பெரிய போரை விவரிக்கிறது. அந்தப் போரில் வில்லவர்-மீனவர் தோற்கடிக்கப்பட்டு நாகர்கள் மத்திய இந்தியாவை ஆக்கிரமித்தனர்.

நாகர்களின் தெற்கு நோக்கி இடம்பெயர்வு

நாகர்களின் பல்வேறு குலங்கள் தென்னிந்தியா மற்றும் ஸ்ரீலங்காவுக்கு குறிப்பாக கடலோர பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர்.

1. வருணகுலத்தோர் (கரவே)
2. குகன்குலத்தோர் (மறவர், முற்குகர், சிங்களர்)
3. கவுரவகுலத்தோர் (கரையர்)
4. பரதவர்
5. களப்பிரர்கள் (கள்ளர், களப்பாளர், வெள்ளாளர்)
6. அஹிச்சத்ரம் நாகர்கள்(நாயர்)

இந்த நாகர்கள் வில்லவர்களின் முக்கிய எதிரிகள் ஆவர். நாகர்கள் டெல்லி சுல்தானேட், விஜயநகர நாயக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் காலனித்துவ ஆட்சியாளர்களுடன் கூடி பக்கபலமாக இருந்து வில்லவர்களை எதிர்த்தனர், இது வில்லவர் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

கர்நாடகாவின் பாணர்களின் பகை
_________________________________________

பொதுவான தோற்றம் இருந்தபோதிலும் கர்நாடகாவின் பாணர்கள் வில்லவர்களுக்கு எதிரிகளாயிருந்தனர்.

கி.பி 1120 இல் கேரளாவை துளுநாடு ஆளுப அரசு பாண்டியன் இராச்சியத்தைச் சேர்ந்த பாணப்பெருமாள் அராபியர்களின் உதவியுடன் ஆக்கிரமித்தார்.

கி.பி 1377 இல் பலிஜா நாயக்கர்கள் தமிழ்நாட்டை ஆக்கிரமித்தனர். வில்லவரின் சேர சோழ பாண்டியன் இராச்சியங்கள் விஜயநகர சாம்ராஜ்யத்தின் பலிஜா நாயக்கர்களால் (பாணாஜிகா, ஐந்நூற்றுவர் வளஞ்சியர் என்னும் மகாபலி பாணரின் சந்ததியினர்) அழிக்கப்பட்டன.

வில்லவர்களின் முடிவு

1310 இல் மாலிக் காபூரின் படையெடுப்பு பாண்டிய வம்சத்தின் தோல்விக்கு வழிவகுத்தது. வில்லவர்கள் படுகொலை செய்யப்பட்டனர், மேலும் மூன்று தமிழ் ராஜ்யங்களும் முடிவுக்கு வந்தன.

கர்நாடகாவின் பாண்டியன் ராஜ்யங்கள்
__________________________________________

கர்நாடகாவில் பல பாணப்பாண்டியன் ராஜ்யங்கள் இருந்தன

1. ஆலுபா பாண்டியன் இராச்சியம்
2. உச்சாங்கி பாண்டியன் இராச்சியம்
3. சான்றாரா பாண்டியன் இராச்சியம்
4. நூறும்பாடா பாண்டியன் இராச்சியம்.

கர்நாடக பாண்டியர்கள் குலசேகர பட்டத்தையும் பயன்படுத்தினர். நாடாவா, நாடாவரு, நாடோர், பில்லவா, சான்றாரா பட்டங்களையும் கொண்டவர்கள்.

ஆந்திரபிரதேச பாணர்கள்

ஆந்திராவின் பாண ராஜ்யங்கள்

1. பாண இராச்சியம்
2. விஜயநகர இராச்சியம்.

பலிஜா, வாணாதிராஜா, வாணாதிராயர், வன்னியர், கவரா, சமரகோலாகலன் என்பவை வடுக பாணர்களின் பட்டங்களாகும்.

பாண வம்சத்தின் கொடிகள்
_________________________________________

முற்காலம்
1. இரட்டை மீன்
2. வில்-அம்பு

பிற்காலம்
1. காளைக்கொடி
2. வானரக்கொடி
3. சங்கு
4. சக்கரம்
5. கழுகு

திருவிதாங்கூர் மன்னர்கள் சங்கு முத்திரையுடன் ஒரு கொடியைப் பயன்படுத்தினர். ஏனென்றால், அவர்கள் கர்நாடகாவின் துளுநாட்டில் ஆலுபா வம்சத்தைச் சேர்ந்தவர்கள். சேதுபதி அனுமன் சின்னத்துடன் ஒரு கொடியைப் பயன்படுத்தினார். அதற்கு காரணம் அவர் பாண - கலிங்க வாணாதிராயர் ஆவர்.

VILMEENKODI said...

வில்லவர் மற்றும் இயக்கர்

வில்லவர்

வில்லவர் மற்றும் அவர்களின் உறவினர்களான மீனவர் ஆகியோர் வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் பாண்டிய ராஜ்ஜியத்தை நிறுவிய திராவிட தமிழ் குலத்தினர் ஆவர். வில்லவரின் மூன்று துணைக்குழுக்கள் வில்லவர், மலையர் மற்றும் வானவர்கள் ஆகும்.

1. வில்லவர் வேட்டைக்காரர்கள் மற்றும் வில்லாளர்கள். வில்லவர் கொடி வில் மற்றும் அம்பு சின்னத்தைக் கொண்டிருந்தது.

2. மலையர் மலைவாழ் மக்கள். மலையர் கொடி ஒரு மலை சின்னத்தைக்கொண்டிருந்தது.

3. வானவர் காட்டில் வசிப்பவர்கள். வானவர் கொடி மரம் அல்லது புலி சின்னத்தைக்கொண்டிருந்தது.

4. மீனவர் மீன் பிடிக்கும் தொழிலை கொண்டவர்கள். மீனவர் கொடி இரட்டை மீன் சின்னத்தை கொண்டிருந்தது.

பிற்காலத்தில் அனைத்து வில்லவர் மீனவர் குலங்களும் ஒன்றிணைந்து நாடாழ்வார் குலங்களை உருவாக்கியது. நாடாழ்வார் பட்டங்கள் நாடாழ்வார், வில்லவர், நாடார், மாற நாடார், பணிக்கர், திருப்பாப்பு, சாணார் போன்றவை. வில்லவரும் மீனவரும் இந்தியா முழுவதையும் ஆண்ட ஒரு பெரிய திராவிட குலமாகிய பாணா மீனா குலத்தின் ஒரு பகுதியாக இருந்தனர்.

பாணர் மற்றும் வில்லவர் பழங்கால இந்தியாவின் பூர்வீக அசுர-திராவிட ஆட்சியாளர்கள் ஆவர். பாண்டிய ராஜ்ஜியத்தின் பிரிவுவரலாற்றுக்கு முந்தைய காலத்தில் பண்டைய பாண்டிய இராச்சியம் மூன்று அரசுகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொன்றும் வில்லவர்களால் பாதுகாக்கப்பட்டது. அவை

பாண்டிய ராஜ்யம் பாதுகாத்தது
1. வில்லவர்
2. மலையர்
3. வானவர்
4. மீனவர்

சோழ சாம்ராஜ்யம் பாதுகாத்தது
1. வானவர்
2. வில்லவர்
3. மலையர்

சேர இராச்சியம் பாதுகாத்தது
1. வில்லவர்
2. மலையர்
3. வானவர்

பிற்கால சேர வம்ச காலத்தில் சேர வம்சத்தை ஆதரித்த இலங்கை வம்சத்தினர்
4. இயக்கர்

இயக்கர்

இயக்கர் திராவிட வில்லவர் மக்களிடமிருந்து வேறுபட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள். இயக்கர் இலங்கையின் பூர்வீக மக்கள் ஆவர். இயக்கரின் மாற்றுப் பெயர்கள் தமிழில் ஈழ மற்றும் சிங்களத்தில் ஹெலா. எனவே இலங்கை தமிழில் ஈழம் மேலும் சிங்களத்தில் ஹெலத்வீபா என்று அழைக்கப்பட்டது. இயக்கர் மட்டுமே இலங்கையின் உண்மையான பழங்குடி மக்கள் ஆவார்கள். ஆனால் அசுர-திராவிட மக்கள் பழங்காலத்தில் இருந்து இலங்கையில் இருந்தனர்.

மகாவெலி கங்கா நதிக்கு வில்லவர்-பாணா குலங்களின் மூதாதையரான மகாபலியின் பெயரிடப்பட்டது. இயக்கர் அசுர-திராவிடத் தமிழர்களுடன் சில கலப்புகளைக் கொண்டிருந்தனர். பழங்காலத்தில் ஈழவர் என்றால் இயக்கர் மட்டுமே.

ஹெல மொழி

இயக்கர் கிமு மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்னர் தமிழ் மொழியை முதன்மை மொழியாக பயன்படுத்தியிருக்கலாம். ஆனால் அவர்கள் சிங்கள மக்களுடன் கலந்து பௌத்த மதத்தை ஏற்றுக்கொண்ட பிறகு இயக்கர் ஹெல (ஹெலு அல்லது இலு) மொழியைப் பயன்படுத்தினார். ஹெல மொழி பிராகிருதம் மற்றும் பாலி மொழிகளுடன் நெருங்கிய தொடர்புடைய இந்தோ-ஆரிய மொழியாகும்.

திமிலர்

திமிலர் இயக்கர் இனத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஆவர். பதின்மூன்றாம் நூற்றாண்டில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பட்டாணிகளின் உதவியுடன் கலிங்கர்களால் திமிலர் கடைசியாக அழிக்கப்பட்டதாக மட்டக்களப்பு மகான்மியம் கூறுகிறது.

VILMEENKODI said...

வில்லவர் மற்றும் இயக்கர்


ஆரம்பகால நாகர்கள்.

சில நாகர்கள் கிமு ஆறாம் நூற்றாண்டுக்கு முன்னர் இலங்கைக்கு குடிபெயர்ந்தனர். அவர்கள் இயக்கர்கள் மற்றும் வில்லவர்களுடன் நட்பாக இருந்தனர்.

திரையர்

தமிழ் காவியமான மணிமேகலையில் குறிப்பிடப்பட்டுள்ள பண்டைய இலங்கையில் வசித்து வந்த திரையர் நாக மீனவர்கள் ஆவர். காவியத்தின் கதாநாயகியான மணிமேகலை, கி.பி மூன்றாம் நூற்றாண்டில், புத்தர் (கிமு 563 முதல் 483 கி.மு. வரை) பயன்படுத்திய இருக்கை அல்லது கால் பலகை இருந்த வடக்கு இலங்கையில் உள்ள ஒரு சிறிய தீவான மணிபல்லவத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். புத்தர் உபதேசம் செய்து நாகநாட்டின் இரண்டு மன்னர்களை சமரசம் செய்து வைத்தார்.

யாழ்ப்பாணம் தீபகற்பத்தில் மணிபல்லவத்தை (நைனாதீவு) ஆட்சி செய்த நாக மன்னர் வலை வாணன் மற்றும் அவரது ராணி வாச மயிலையைப் பற்றி மணிமேகலை கூறுகிறார். அவர்களின் மகள் இளவரசி பீலி வளை ஆரம்பகால சோழ மன்னன் கிள்ளிவளவனுடன் நாகத்தீவில் வைத்து தொடர்பு கொண்டிருந்தாள். இந்த தொடர்பு மூலம் இளவரசர் தொண்டை ஈழத் திரையன் பிறந்தார். இளந்திரையன் காஞ்சிபுரத்திலிருந்து தொண்டை நாட்டை ஆண்டான். திரையர் கேரளாவின் தீய்யருடன் தொடர்புடையவராக இருக்கலாம்.


கடைசி இயக்கர் வம்சம்

இயக்கரின் அறியப்பட்ட கடைசி வம்சம் புலஸ்திய முனிவரால் நிறுவப்பட்டது. புலஸ்தியர் கிமு 6 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆட்சி செய்திருக்கலாம். புலஸ்தியரின் தலைநகரம் நவீன பொலன்னறுவை என்ற புலஸ்தி நகரா ஆகும். புலஸ்தியரின் மகன்கள் அகஸ்திய முனிவர் மற்றும் விஸ்ரவர்.

அகத்திய முனிவர் பொதிகை மலையில் வசித்து வந்தார், அவர் அகத்தியம் என்ற தமிழ் இலக்கண நூலை எழுதினார். விஸ்ரவனின் மகன்கள் குபேரன், இராவணன் மற்றும் விபீஷணன் என்பவர்கள். இராவணனின் ஆட்சி புத்தரின் வாழ்நாளில் இருந்திருக்கலாம். அதாவது கிமு 543 க்கு முன்பு வானர இராணுவத்தால் ராவணன் தோற்கடிக்கப்பட்டிருப்பார். அதைத் தொடர்ந்து சிங்கள நாக வம்சம் கிமு 543 இல் இளவரசர் விஜயனால் நிறுவப்பட்டது.

சிங்கள அரசனும், விபீஷணனும் குருக்ஷேத்திரப் போரின் ஒரே காலகட்டத்தில் வாழ்ந்தவர்கள் என்று மகாபாரதம் குறிப்பிட்டுள்ளது. மகாபாரதம், இலங்கையிலிருந்து சிங்கள அரசர் குருக்ஷேத்ரா போரில் பங்கேற்றதையும், போருக்குப் பிறகு யுதிஷ்டிரரால் நடத்தப்பட்ட ராஜசூய யாகத்தில் சிங்கள அரசர் பங்கேற்றதையும் குறிப்பிடுகிறது. மகாபாரதம் பாண்டவ சகாதேவன் இலங்கையில் மன்னர் விபிஷணனை சந்தித்ததையும் குறிப்பிட்டுள்ளது. சிங்கள இராச்சியம் கிமு 543 இல் நிறுவப்பட்டதால் மகாபாரதம் நடந்த காலம் கிமு 543 க்குப் பிறகாக இருக்கலாம்.

தாம்பபாணியும் பொலன்னறுவையும் அக்காலத்தில் இயக்கர்களின் இரண்டு தலைநகர்களாக இருந்திருக்கலாம்.

வானரர்கள்

ராவணனை வென்ற வானரர்கள் கர்நாடகாவில் உள்ள கிஷ்கிந்தாவில் இருந்து ஆட்சி செய்தனர். வானரர்கள் விஜயநகரத்தின் பலிஜா நாயக்கர்களின் மூதாதையர்கள். மகாபலியின் வழிவந்த பலிஜா நாயக்கர்கள் பாணாஜிகா, வளஞ்சியர் மற்றும் வானரர் என்றும் அழைக்கப்பட்டனர். பலிஜா நாயக்கர்களின் அரச மாளிகை அமைந்திருந்த கிஷ்கிந்தாவின் நவீன பெயர் ஆனேகுண்டி. விஜயநகர தலைநகர் ஹம்பி பழமையான கிஷ்கிந்தாவிலிருந்து 20 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. கிமு ஆறாம் நூற்றாண்டில் பொலன்னறுவையில் ராவணன் ஆட்சியை வானரர்கள் முடிவுக்கு கொண்டு வந்தனர்.

VILMEENKODI said...

வில்லவர் மற்றும் இயக்கர்

பிற்கால நாகர்கள்

ராவணன் தோற்கடிக்கப்பட்ட உடனேயே குஹன் குலத்தைச் சேர்ந்த நாகர்கள் கிமு ஆறாம் நூற்றாண்டில் இலங்கையை ஆக்கிரமித்தனர். குஹன்குலத்தோர் சிங்க நாடு, வங்காள நாடு மற்றும் ஒரிசாவைச் சேர்ந்த சிங்கர், வங்கர் மற்றும் கலிங்கர் என்பவர்களாவர்.

இந்த மூன்று நாட்டு மக்களின் கலவையால் முக்குலத்தோர் அல்லது முற்குஹர் உருவானார்கள்.
முற்குஹரின் மூன்று குலங்கள்
1. சிங்களவர்கள்
2. முற்குஹர் (முக்குவர்)
3. மறவர்

பின்னர் குகன்குலத்தோர் ஆகிய நாகர்கள் இலங்கை, ராமநாடு மற்றும் கடலோர தமிழகத்தை ஆக்கிரமித்தனர் .ஆரம்பகால சிங்கள இராச்சியம் சிங்கள இளவரசர் விஜயனால் நிறுவப்பட்டது, ஆனால் பிற்காலத்தில் வங்கர் மற்றும் கலிங்கன் வம்சங்கள் சிங்களரை மாற்றினர்.

இயக்கர் சிங்களக் கலவை

கிமு 543 இல் சிங்கள இளவரசர் விஜயன் தனது 700 பேர் இராணுவத்துடன் இலங்கையை அடைந்தார். அவர் இயக்கர் இளவரசி குவேணியை மணந்தார் மற்றும் இயக்கரின் மற்றொரு தலைநகரான தாம்பபாணியை ஆட்சி செய்தார். ஆனால் விரைவில் குவேனி தனது குழந்தைகளுடன் காட்டுக்கு விரட்டப்பட்டார்.

புத்த மதத்தின் எழுச்சி

இலங்கைக்கு குடிபெயர்ந்த நாகர்களில் பலர் ஏற்கனவே பௌத்தர்களாக இருந்திருக்கலாம். அசோகரின் மகன்கள் மகேந்திரன் மற்றும் சங்கமித்ரா ஆகியோர் கி.பி 250 இல் அனுராதபுரத்தில் இருந்து ஆட்சி செய்த தேவனாம்பியா திஸ்ஸா (கிமு 250 முதல் கிமு 210 வரை) காலத்தில் இலங்கைக்கு வந்தபோது பெரும்பாலான இலங்கையர்கள் புத்த மதத்திற்கு மாறினர்.

கேரளாவுக்கு இயக்கர் இடம்பெயர்வு

இலங்கையில் கலிங்கர்களின் ஆதிக்கம் நிறுவப்பட்ட பிறகு, ஈழவர் என்ற இயக்கர் கேரளாவுக்கு குடிபெயரத் தொடங்கினர். இது கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் அதாவது சங்க காலம் முடிந்த பிறகு இருக்கலாம். பண்டைய கேரளாவிலும் பௌத்தம் செழித்தது. குடியேறிய இயக்கர்களும் புத்த மதத்தினர். அவர்கள் அருகக் கடவுளை வணங்கினர். அருக அல்லது அர்ஹதன் என்பது புத்தரின் மாற்றுப் பெயர். 1335 இல் சேர வம்சத்தின் வீழ்ச்சி வரை ஈழவர் / இயக்கர் சேரன் வம்சத்தின் வில்லவர் / நாடாள்வாரிடமிருந்து தனித்தனியாக இருந்தார்கள்.

VILMEENKODI said...

வில்லவர் மற்றும் இயக்கர்

பிற்கால சேர வம்சம் (கி.பி. 800 முதல் கி.பி 1102 வரை)

தமிழ் வில்லவர்களின் பிற்கால சேர வம்சத்தை வில்லவர், வானவர் மற்றும் மலையர் குலத்தினர் ஆதரித்தனர்.

சேர நாட்டில் இயக்கர்

பிற்கால சேரர் காலத்தில் சில பகுதிகளில், இயக்கர் அல்லது யக்கர் பிரபுக்கள் நிலப்பிரபுக்களாக ஆட்சி செய்தனர். எர்ணாகுளத்தில் உள்ள காக்கநாட்டிலும் குமாரநெல்லூர் மற்றும் புனலூரிலும் இயக்கர் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இயக்கர் படையினர் அல்லது சேவகர்களாகப் பணியமர்த்தப்பட்டதாகத் தெரிகிறது. ஈழவர்கள் சேவகர் என்று அழைக்கப்பட்டனர்.


பிற்கால சேர வம்சத்தின் முடிவு

துளு-அரபு அச்சுறுத்தலைத் தொடர்ந்து பிற்கால சேர வம்சம் கி.பி 1102 இல் கொடுங்களூரில் இருந்து கொல்லத்திற்கு மாற்றப்பட்டது. வில்லவரின் பெரும்பகுதி மக்கள் கொல்லத்திற்கு குடிபெயர்ந்ததனர்.

கி.பி 1120 இல் ஆலுபா வம்சத்தைச் சேர்ந்த துளு படையெடுப்பாளர் பாணப்பெருமாள் 350000 பேர் அடங்கிய நாயர் படையுடன் கேரளாமீது படையெடுத்து மலபாரை ஆக்கிரமித்தார். பாணப்பெருமாள் தனது மகன் உதயவர்மன் கோலத்திரியை முதல் அரசராகக் கொண்டு கண்ணூரில் துளு கோலத்திரி வம்சத்தை நிறுவினார். நாயர்கள் என்று அழைக்கப்படும் துளு-நேபாள நாகர்கள் மலபாரின் காசர்கோடு, கண்ணூர், கோழிக்கோடு மற்றும் மலப்புறம் மாவட்டங்களை ஆக்கிரமித்தனர். அக்காலத்தில் மலபாரில் ஒரு அரபு குடியேற்றம் நிறுவப்பட்டது.

சேராய் வம்சம் (கி.பி 1102 முதல் கி.பி 1335 வரை)

கி.பி 1102 இல் கொடுங்கலூர் சேரர்கள் கொல்லத்திற்கு இடம்பெயர்ந்ததைத் தொடர்ந்து, சேர வம்சம் கொல்லத்தின் ஆய் வம்சத்துடன் இணைந்தது. கி.பி 1156 முதல் 1335 வரை கேரளம் கொல்லம் சேரர்களால் ஆளப்பட்டது. நாடார் என்று அழைக்கப்படும் வில்லவர், சண்ணார் மற்றும் பணிக்கர் குலங்கள், கொல்லத்திற்கு குடிபெயர்ந்து சேராய் ராஜ்ஜியத்தை உருவாக்கினர் (கி.பி. 1102 முதல் கி.பி. 1333). தென் கேரளாவில் வில்லவர் சக்தி வாய்ந்தவராக இருந்தார்கள்.

வில்லார்வட்டம் இராச்சியம் (கி.பி 1120 முதல் 1450 கி.பி.)

மத்திய கேரளாவில் இருந்த வில்லவர் மற்றும் பணிக்கர் குழு வில்லார்வெட்டம் வம்சத்தை உருவாக்கினர். வைக்கம் அருகே உள்ள உதயனாபுரத்திலிருந்து சேந்தமங்கலத்திற்கு இடையே உள்ள பகுதிகளை வில்லார்வெட்டம் ராஜ்யம் ஆட்சி செய்தது. உதயம்பேரூர் எர்ணாகுளம், பரவூர், இளங்குன்னபுழ, வைபீன் ஆகியவை வில்லார்வட்டம் ராஜ்யத்தின் ஆட்சியின் கீழ் இருந்தன. கி.பி 1339 இல், வில்லார்வட்டம் அரசர் தம்முடைய குடிமக்களுடன் ஒரு கிறிஸ்தவராக மாறினார். இது கேரளாவில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையை அதிகரித்தது. கி.பி 1450 இல் வில்லார்வட்டம் ராஜ்யத்தின் மேலாதிக்கம் கொச்சி ராஜ்யத்துடன் சேர்ந்த பணிக்கர்களாய பாலியத்து அச்சன்களுக்கு வழங்கப்பட்டபோது வில்லார்வட்டம் இராச்சியம் முடிவுக்கு வந்தது.

வில்லார்வட்டம் ராஜ்யத்தின் கீழ் பரவூர், வைபீன் மற்றும் உதயம்பேரூர் ஆகியவை கிறிஸ்தவத்தின் முக்கிய மையங்களாக மாறின. வில்லார்வட்டம் பணிக்கர்கள் போர்த்துகீசியர்களுடன் சேர்ந்து ஒரு கலப்பின மெஸ்டிசோ சமூகத்தை உருவாக்கினர், பின்னர் அந்த சமூகம் சிரியன் கிறிஸ்தவத்தால் ஒருங்கிணைக்கப்பட்டது.

மாலிக் காஃபூரின் படையெடுப்பு

கி.பி 1310 மாலிக் காஃபூர் படையெடுப்பைத் தொடர்ந்து, அனைத்து தமிழ் வம்சங்களும் முடிவுக்கு வந்தன. சேராய் மன்னர் ரவிவர்மா குலசேகரன் காஞ்சிபுரத்தில் திரிபுவனசக்ரவர்த்தியாக முடிசூட்டப்பட்டாலும், கிபி 1314 இல் துருக்கியர்களால் பதவி நீக்கம் செய்யப்பட்டார்

கோலத்திரியின் எழுச்சி

அரபு மற்றும் துருக்கியர்களின் ஆதரவுடன் கண்ணூரின் துளு ஆட்சியாளர் கோலத்திரி கேரளாவின் உச்ச தலைவரானார்.1314 ஆம் ஆண்டில் அவர் ஆற்றிங்கல் ராணி மற்றும் குன்னுமேல் ராணிகள் என்ற இரண்டு துளு இளவரசிகளை வேணாட்டை ஆள்வதற்காக வேணாட்டுக்கு அனுப்பினார். கி.பி 1335 இல் மதுரை சுல்தானகம் நிறுவப்பட்டபோது, ​​அஹிச்சத்திரத்திலிருந்து நம்பூதிரிகள் மற்றும் நாயர்கள் என்ற துளு-நேபாள ஆரிய-நாகா குடியேற்றக்காரர்கள் கேரளாவில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டினர்.


கடைசி தமிழ் வில்லவர் ஆட்சியாளர்

கடைசி சேர ஆட்சியாளர் வீர உதயமார்த்தாண்டா வர்மா வீர பாண்டியன், பாண்டியன் தாய்க்கு பிறந்த சேராய் மன்னர் ரவிவர்மா குலசேகரனின் மகன். அவர் ஆற்றிங்கல் மற்றும் குன்னுமேல் ராணிகளால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். கடைசியான தமிழ் வில்லவர் ஆட்சியாளர் உதயமார்த்தாண்ட வர்மாவின் ஆட்சி கி.பி 1335 இல் மதுரை சுல்தானேட் நிறுவப்பட்ட போது முடிவடைந்தது. குன்னுமேல் ராணியின் மகன் குன்னுமேல் ஆதித்ய வர்மா கி.பி 1335 இல் வேணாட்டில் ஒரு துளு தாய்வழி வம்சத்தை நிறுவினார்.

VILMEENKODI said...

வில்லவர் மற்றும் இயக்கர்

ஈழவரோடு சேர்ந்த வில்லவர்

கி.பி 1335 இல் தமிழ் ராஜ்ஜியங்கள் வீழ்ச்சியடைந்த பிறகு சில வில்லவர், பணிக்கர் மற்றும் சண்ணார் ஆகியோர் ஈழவர்களுடன் இணைந்தனர். பணிக்கர்களும் சண்ணாரும் ஈழவர்களிடையே பிரபுத்துவமாக கருதப்பட்டனர். ஆனால் ஈழவருடன் சேர்ந்த வில்லவர் ஈழவரின் மக்கள் தொகையில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்தனர். இருபதாம் நூற்றாண்டில் சண்ணார்களும் பணிக்கர்களும் ஈழவரின் மறுமலர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தனர்.


வில்லவரின் இடம்பெயர்வு

கி.பி 1335 இல் சேராய் வம்சத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, வில்லவர்-நாடாழ்வார் மக்கள் தெற்கே திருவனந்தபுரம் மற்றும் கன்னியாகுமரிக்கு குடிபெயர்ந்தனர். கன்னியாகுமரிக்கு அருகிலுள்ள கோட்டையடி கேரளாவின் வில்லவரால் கட்டப்பட்ட கடைசி கோட்டையாக இருக்கலாம். கி.பி.1610 வரை வில்லவர் இறையாண்மையைக் கொண்டிருந்தனர்.

அதே காலகட்டத்தில் தமிழ்நாட்டின் வில்லவர் வம்சங்களாகிய சோழர்கள் மற்றும் பாண்டியர்கள் அறுதிதெற்கிற்கு குடிபெயர்ந்தனர். களக்காட்டில் சோழர்கள் கோட்டையையும், கல்லிடைக்குறிச்சி மற்றும் அம்பாசமுத்திரத்தில் பாண்டியர்கள் கோட்டைகளையும் கட்டினார்கள்.

கி.பி 1610 இல் கொச்சியின் வெள்ளாரப்பள்ளி கோவிலகத்தைச் சேர்ந்த ஒரு துளு-நேபாள பிராமண வம்சம் போர்த்துக்கேயர் காலத்தில் வேணாட்டின் ஆட்சியாளர்களாக நிறுவப்பட்டனர். இந்தக் காலத்திற்குப் பிறகு வில்லவர் கீழ் அடுக்குக்குத் தள்ளப்பட்டனர்.

வில்லவர் மற்றும் இயக்கர் ஒன்றியம்

வில்லவரும் இயக்கரும் முற்றிலும் மாறுபட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள். வில்லவர் திராவிட தமிழினத்தைச் சேர்ந்தவர்கள். இயக்கர் இலங்கை பௌத்தர்கள் ஆயிருந்தார்கள். ஆனால் பிற்கால சேர வம்சத்தின் ஆட்சியின் போது, ​​இயக்கர் இராணுவத்தில் வீரர்களாகவும் நிலப்பிரபுக்களாகவும் நியமிக்கப்பட்டனர், அவர்கள் சேர வம்சத்தை ஆதரித்தனர். கி.பி 1335 இல் தமிழ் வம்சங்கள் வீழ்ச்சியடைந்த பின்னரே ஈழவருடன் வில்லவர் கலப்பு ஏற்பட்டது.
மத்திய கேரளாவில் பெரும்பாலான வில்லவர்களும் தெற்கே குடிபெயர்ந்தனர் அல்லது போர்த்துகீசியர்களுடன் சேர்ந்தனர். எஞ்சியிருந்த பணிக்கர்களும் சண்ணார்களும் ஈழவர்களுடன் சேர்ந்துள்ளனர். நாடாழ்வார் மற்றும் ஈழவருக்கு பொதுவான தோற்றம் இல்லை ஆனால் சில பகுதிகளில் சமீப காலங்களில் கலப்பு உள்ளது..

ஈழவ சண்ணார் மற்றும் பணிக்கர்

சண்ணாரும் பணிக்கர்களும் முதலில் தமிழ் வில்லவர் குலங்கள், அவர்கள் தமிழ் வில்லவர் ராஜ்யங்களுக்கு அதாவது சேர, சோழ மற்றும் பாண்டிய அரசுகளுக்கு சேவை செய்தனர். தமிழ் வில்லவர் ராஜ்ஜியங்கள் கி.பி 1335 இல் தாய்வழி துளு-நேபாள இராச்சியங்களால் மாற்றப்பட்டன. இந்த காலகட்டத்திற்குப் பிறகு தமிழ் வில்லவர், பணிக்கர் மற்றும் சண்ணார் ஆகியோர் இன ரீதியாக வேறுபட்ட இயக்கர் சமூகத்தில் இணைந்து ஈழவ சமூகத்தை உருவாக்கினர். பணிக்கர் மற்றும் சண்ணார் ஆகியோர் ஈழவ சமூகத்தின் உயர்குடித் தலைவர்களாக இருந்தவர்கள். இவ்வாறாக ஈழவர்களின் வேர்கள் இலங்கை இயக்கர், தமிழ் வில்லவர், தீயர்கள் மற்றும் வில்லவர்களுக்கு இணையான துளுநாடு பில்லவர்களில் உள்ளன.

ஈழவர்களைன் அடக்கியது

கி.பி 1333 இல் துளு வம்சங்கள் உருவான பிறகு, ஈழவர், சண்ணார் மற்றும் பணிக்கர் ஆகியோர் துளு-நேபாள நாயர்களாலும் நம்பூதிரிகளாலும் அடக்கப்பட்டனர்.

சீரப்பஞ்சிற பணிக்கர்கள்

1623 கி.பி மற்றும் 1647 க்கு இடைப்பட்ட காலத்தில் முகம்மாவின் சீரப்பஞ்சிற பணிக்கர்கள் பந்தளம் பாண்டிய ராஜ்ஜியத்துடனும், ஐயப்பன் சுவாமியுடனும் தொடர்புடையவர்கள் ஆவர். திருமலை நாயக்கர் அனுப்பிய உதயணன் தலைமையிலான மறவப் படைக்கு எதிரான போரில் சீரப்பஞ்சிற பணிக்கர்கள் சபரிமலை ஐயப்பன் சுவாமியை ஆதரித்தார்கள்.

ஆலும்மூட்டில் சண்ணார்


1930 களில் கேரளாவின் மிகப்பெரும் பணக்கார குடும்பமாக ஆலும்மூட்டில் சண்ணார் குடும்பம் இருந்தது. ஆனால் திருவிதாங்கூரின் துளு-நேபாள வம்சத்தால் அந்த சகாப்தத்தில் அவர்களுக்கு பல உரிமைகள் மறுக்கப்பட்டன.

ஈழவர்களின் மறுமலர்ச்சி

இருபதாம் நூற்றாண்டில் ஈழவ சமூகத்தின் மறுமலர்ச்சியில் சீரப்பஞ்சிற பணிக்கர்களும் ஆறுன்னாசேரி சண்ணார்களும் மற்றும் பல ஈழவப் பணிக்கர்களும் முக்கியப் பங்காற்றினர். தற்போது ஈழவர்கள் கேரளாவில் அதிக மக்கள்தொகை உள்ளவர்கள் மற்றும் ஆதிக்கம் செலுத்தும் சமூகம் ஆகும்.

முடிவுரை

இயக்கர் மற்றும் வில்லவர் முறையே இலங்கை மற்றும் பண்டைய தமிழகம் (கேரளா மற்றும் தமிழ்நாடு) ஆண்ட வம்சங்கள். கிமு ஆறாம் நூற்றாண்டில் வானரர்கள் பலிஜா நாயக்கர்களின் மூதாதையர்கள் இயக்கர் சாம்ராஜ்யத்தை முடிவுக்குக் கொண்டு வந்தனர். 1377 இல் பலிஜா நாயக்கர்கள் தமிழ்நாட்டை ஆக்கிரமித்து பாண்டிய ராஜ்ஜியத்தை அழித்து வில்லவர் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர்.

VILMEENKODI said...

அசுர திராவிட துடக்கம்

தைத்யர் மற்றும் தானவர் குலங்களின் கிளர்ச்சி

தைத்ய குலத்தின் மன்னர் மகாபலி என்று அழைக்கப்பட்டார். தைத்ய மன்னர் மகாபலியின் தலைமையில் தானவர்கள் தேவர்களுக்கு (ஆரியர்களுக்கு) எதிராக கிளர்ச்சி செய்தனர். சத்திய யுகத்தின் போது தேவர்கள் (ஆரியர்கள்) தானவர்களை சொர்க்கத்திலிருந்து (வட இந்தியாவிலிருந்து) நாடுகடத்தினர்.

நாடுகடத்தப்பட்ட பின்னர், தானவர்கள் விந்திய மலைகளில் தஞ்சம் புகுந்தனர். தானவா என்றால் தனு உள்ளவர்கள் அதாவது வில் உள்ளவர்கள், வில்லவர். பாணா மற்றும் அவர்களது கிளைக்குலங்களான தைத்யா மற்றும் தானவா ஆகியோர் அசுரர்களாக கருதப்பட்டனர். திராவிட வில்லவர், மீனவர் மற்றும் அசுர பாணா, மீனா குலங்கள் பொதுவான மூதாதையர்களைக் கொண்டிருந்தனர்.

தானவா மல்யுத்த வீரர்கள்

கம்ச மன்னரின் உத்தரவின்படி, அக்ரூரா என்ற யாதவ மூப்பர் கிருஷ்ணர் மற்றும் பலராமரை,மதுராவில் நடந்த ஒரு தனுஷ் யாகம் மற்றும் நட்பு மல்யுத்த போட்டியில் கலந்து கொள்ள அழைத்திருந்தார். பயங்கரமான தானவா மல்யுத்த வீரர்கள் சானுரா மற்றும் முஷ்டிகா ஆகியோர் இளம் கிருஷ்ணர் மற்றும் பலராமனால் கொல்லப்பட்டனர்.

புத்தமதத்தில் தானவர்

புத்தமதத்தில் அவர்கள் வில் தரிக்கும் தானவேகச அசுரர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

முந்தைய காலகட்டத்தில் இந்தியாவில் வசித்து வந்தவர்கள் பெரும்பாலும் திராவிடர்கள் ஆவர். அவர்கள் பல திராவிட நாடுகளை உண்டாக்கினர். தென்னிந்தியாவில் பல பாண்டியன் ராஜ்யங்கள் வில்லவர்-மீனவர் குலங்களால் நிறுவப்பட்டன.

வட இந்தியாவில் வில்லவர் தொடர்புடைய பாணா-மீனா வம்சங்கள் மகாபலி என்று அழைக்கப்படும் மன்னர்களால் ஆளப்பட்ட ஏராளமான பாணப்பாண்டியன் ராஜ்யங்களை நிறுவினர்.

மகாபலி வம்சம்

வில்லவர் மற்றும் பாணர்கள் இருவரும் அசுர மன்னர் மகாபலி மற்றும் அவருடைய மூதாதையரான ஹிரண்யகசிபு ஆகியோருடைய வம்சத்திலிருந்து வந்ததாகக் கூறினர். தென்னிந்திய பாண மற்றும் பாண்டியன் மன்னர்கள் ஹிரண்யகர்பா விழாவை நிகழ்த்தி வந்தனர். ஹிரண்யகசிபுவின் பண்டைய தலைநகரம் இரணியல் (ஹிரண்ய சிம்ஹ நல்லூர்) என்று அழைக்கப்படுகிறது.

கன்னியாகுமரி புராணத்தில் பாணாசுரன்

பாணாசுரன் தேவர்கள் மற்றும் அசுரர்களின் பொதுவான கடவுளான பிரம்மாவிடம் பிரார்த்தனை செய்தார். முழு பிரபஞ்சத்திலும் ஆணின் அல்லது பெண்ணின் கைகளில் கொல்லப்படமாட்டார் என்ற அழியாத வரத்தை பாணாசுரன் பெற்றார். திருமணமாகாத பெண் அல்லது குழந்தையால் மட்டுமே பாணாசுரனை கொல்ல முடியும். கன்னியாகுமரி பராசக்தியின் அவதாரமாக பிறந்தார். பாணாசுரன் கன்னியாகுமரியை கடத்த முயன்றார் ஆனால் கன்னியாகுமரி தேவியால் கொல்லப்பட்டார்.

சீதையின் சுயம்வரத்தில் பாணாசுரன்

பாணாசுரன் மற்றும் ராவணன் இருவரும் சீதா தேவியின் சுயம்வரத்தில் கலந்து கொண்டனர். ஆனால் இராவணனும் பாணாசுரனும் வில்லைப் பார்த்தவுடன் அமைதியாக நழுவி விட்டனர்.

மகாபாரத காலத்தில் பாணாசுரன்

பாணாசுரனின் மகள் உஷா பகவான் கிருஷ்ணரின் பேரன் அனிருத்தனை கனவு கண்டார். உஷாவின் தோழி சித்ரலேகா, இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகள் மூலம், கிருஷ்ணரின் அரண்மனையில் இருந்து அனிருத்தனை கடத்தி, உஷாவிடம் கொண்டு வந்தார். அனிருத்தன் உஷாவை விரும்பினார் ஆனால் பாணாசுரன் அவனை சிறையில் அடைத்தார். இது பகவான் கிருஷ்ணர் பலராமன் மற்றும் பிரத்யும்ன னுடன் ஒரு போருக்கு வழிவகுத்தது, பாணாசுரன் தோற்கடிக்கப்பட்டார். அதன் பிறகு உஷாவுடன் அனிருத்தனுக்கு திருமணம் நடந்தது.

ஆந்திராவில் ஒரு பாண இராச்சியம் இருந்தது, இது விஜயநகர நாயக்கர்கள் உட்பட பலிஜாக்களின் பல ஆளும் வம்சங்களை உருவாக்கியது. மன்னன் மகாபலியில் தோன்றியதால் அவர்கள் பலிஜாக்கள் என்று அழைக்கப்பட்டனர். பலிஜாக்கள் பாணாஜிகா அல்லது வளஞ்சியர் என்றும் அழைக்கப்பட்டனர்.
வாணாதி ராயர், வன்னியர் மற்றும் வாணர் ஆகியவையும் தெலுங்கு பாணர்களின் பாண வம்ச பட்டங்கள் ஆகும்.

வாணர்

பாணர் காடுகளில் தங்க விரும்பினர். எனவே கடம்ப பாண தலைநகரான பாணவாசியை வனவாசி என்றும் அழைத்தனர். அவர் வாணர் என்றும் அழைக்கப்படுகின்றனர். வானர அரசர் பாலியின் தலைநகரம் கிஷ்கிந்தா. பலிஜா நாயக்கர் அரச குடும்பத்தினர் கிஷ்கிந்தா அருகே உள்ள ஆனேகுண்டியில் தங்கியுள்ளனர்.
விஜயநகரை ஆட்சி செய்த பலிஜா நாயக்கர்களின் தலைநகரம் கிஷ்கிந்தாவிலிருந்து 22 கிமீ தொலைவில் உள்ள ஹம்பி ஆகும்.


கர்நாடகாவில் பாணப்பாண்டியன் இராச்சியங்கள்

கர்நாடகாவில் கடம்ப இராச்சியம், நூறும்பாடா பாண்டியன் இராச்சியம், சான்றாரா பாண்டியன் இராச்சியம், உச்சாங்கி பாண்டியன் இராச்சியம், ஆலுபா பாண்டியன் இராச்சியம் உள்ளிட்ட பல பாணப்பாண்டியன் இராச்சியங்கள் இருந்தன.

கடலோர கர்நாடகாவை ஆண்ட துளுவ வம்சம் பாணப்பாண்டியன் குலமாகும். பாண சாளுவ வம்சம் கோவாவை ஆண்டது. சாளுவ மற்றும் துளுவ பாணகுலங்கள் விஜயநகர் பேரரசின் இரண்டு வம்சங்களை உண்டாக்கின.

VILMEENKODI said...

அசுர திராவிட துடக்கம்

பாண்பூர்

வட இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் பாண்பூர் அல்லது பான்பூர் என்று அழைக்கப்படும் பண்டைய பாண வம்ச தலைநகரங்கள் உள்ளன. அங்கிருந்து பாணர் அந்த பிரதேசங்களை ஆட்சி செய்தார்கள்.

மகாபலி

மகாபலி / மாவேலி பட்டத்துடன் பல மன்னர்கள் இந்தியாவை ஆண்டனர். ஒரு மகாபலி அசாமில் சோனித்பூரரில் இருந்து ஆட்சி செய்தார், மற்றொரு மகாபலி கேரளாவிலிருந்து ஆட்சி செய்தார், மேலும் மற்றொரு மகாபலி சிந்து சமவெளியில் தைத்யா மற்றும் தானவர்களின் ராஜாவாக இருந்தார். அவர் ஆரம்பகால ஆரியர்களுக்கு எதிராக போராடினார்.


மீனா வம்சம்

இதேபோல் மீனா வம்சம் ராஜஸ்தான், சிந்து மற்றும் கங்கை சமவெளிகளில் ஆரியர்க்கு முந்தைய ஆட்சியாளர்களாக இருந்தனர், அவர்கள் திராவிட வேர்களைக் கொண்டிருக்கலாம். பாணா இராச்சியம் மற்றும் மீனா-மத்ஸ்ய ராஜ்யம் ஆரியவர்த்தம் கங்கை சமவெளியில் உருவாக்கப்பட்ட பின்னரும் இருந்து வந்தது. பாணா-மீனா ராஜ்யங்கள் வேத கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருந்தன.

மத்ஸ்ய ராஜ்யத்தின் மன்னராகிய விராட மன்னர் பாண்டவர்களை அஞ்ஞாதவாச காலத்தில், அங்கு ஒரு வருடம் வரை மறைத்து வைத்திருந்தார்.
மீனா-மத்ஸ்ய மன்னன் விராடனின் மகள் உத்தரா பின்னர் அர்ஜுனனின் மகன் அபிமன்யுவை மணந்தார்.

பாணா மீனா குலங்கள்

வட இந்தியாவில் வில்லவர் மற்றும் மீனவர் ஆகியவர்கள், பாணா மற்றும் மீனா என்ற பெயர்களால் அறியப்பட்டனர். பாணா வடக்கில் பாணப்பாண்டியன் இராச்சியங்களையும், மீனா வட இந்தியாவில் மீனா அல்லது மத்ஸ்ய ராஜ்யத்தையும் நிறுவினார்கள். மலைப்பாங்கான பகுதிகளை ஆண்ட பில் பழங்குடியினர் வில்லவரின் துணைக்குழுக்களாகவும் இருக்கலாம்.

கி.பி 1030 வரை மீனா ராஜ்ஜியம் ராஜஸ்தானை ஆட்சி செய்தது. நவீன ஜெய்ப்பூர் மீனா குலத்தாரால் நிறுவப்பட்டது. கடைசி சக்திவாய்ந்த மீனா ஆட்சியாளர் ஆலன் சிங் சாந்தா மீனா. இந்தக் காலத்தில் கச்வாஹா ராஜபுத்திரர்களால் மீனாக்கள் தோற்கடிக்கப்பட்டனர்.

பண்டைய வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு ராஜ்யங்கள் வெவ்வேறு இனங்களைச் சேர்ந்தவை. சில ராஜ்யங்கள் பண்டைய அசுர-திராவிட வம்சாவளியைக் கொண்டிருக்கலாம், மற்றவை நாக மற்றும் ஆரிய வம்சாவளியைச் சேர்ந்தவை. சிலர் வெளிநாட்டினர்.

பாண ராஜ்யங்களின் வீழ்ச்சி

வட இந்தியாவை ஆக்கிரமித்த சித்தியன், பார்த்தியன் மற்றும் ஹுண படையெடுப்பாளர்களின் வருகையின் பின்னர் பாண ராஜ்யங்கள் வலிவிழந்தன. பாணா-மீனா ராஜ்யங்கள் ராஜபுத்திர ராஜ்யங்களால் உள்வாங்கப்பட்டிருக்கலாம். மீனா இராச்சியம் கிபி 1036 வரை நீடித்தது. அதன் பிறகு ராஜபுத்திரர்களும் டெல்லி சுல்தானகமும் மீனா ராஜ்யத்தின் பிரதேசங்களை இணைத்து கொண்டனர்.

ராஜபுத்திரர்களின் முடிசூட்டு விழா

ராஜபுத்திரர்களின் முடிசூட்டு விழாவின் போது, ​​பில் அல்லது மீனா குலத்தினரின் கட்டைவிரலிலிருந்து எடுக்கப்பட்ட இரத்தத்தை ராஜாவின் நெற்றியில் பூசுவது வழக்கம். ஏனென்றால், வட இந்தியாவின் அசல் ஆட்சியாளர்கள் பாணா, பில், மீனா மக்கள் ஆயிருந்தனர்.

திராவிட பாரம்பரியம்

உடல் ரீதியாக அனைத்து இந்தியர்களும் பழுப்பு நிறம் மற்றும் திராவிட முக அம்சங்களைக் கொண்டுள்ளனர். அது அவர்களின் திராவிட தோற்றம் காரணமாகும்.

சித்தியன் படையெடுப்பு (கிமு 150)

ஆனால் வட இந்தியாவின் கங்கை சமவெளியில் உள்ள இந்த திராவிட பழங்குடியினர் சித்தியன் படையெடுப்பாளர்களால் தங்கள் தாயகத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

கங்கை பகுதிகளை ஆட்சி செய்த வில்லவர் குலங்களை சித்தியர்கள் தம்முடன் சேர்த்திருக்கலாம். ஜாட் சமூகத்தில் பல வில்லவர்-நாடார் குடும்பப் பெயர்கள் உள்ளன. ஜாட் சமூகம் சித்தியன் வம்சாவளியைக் கொண்டிருந்திருக்கலாம்.

நாடார், சாணார், சாந்தார் பில்வன், பாணா, சேர, சோழர் பாண்டியா போன்ற பல வில்லவர் குடும்பப்பெயர்கள் ஜாட் சமூகத்தின் குடும்பப்பெயர்களில் காணப்படுகின்றன.

VILMEENKODI said...

அசுர திராவிட துடக்கம்

வில்லவர் மீனவர்

தமிழ் வில்லவர் மற்றும் அதன் துணைக்குழுக்கள் வில்லவர், வானவர், மலையர் மற்றும் மீனவர் என்று அழைக்கப்பட்ட அவர்களின் கடலில் செல்லும் உறவினர்கள், இவர்கள் அனைவரும் பண்டைய பாண்டியன் இராச்சியத்தை நிறுவியவர்கள் ஆவர். பண்டைய பாண்டியன் மன்னர்கள் தங்கள் துணைக்குலங்களால் அறியப்பட்டனர் எ.கா. மலையர் குலம்-மலயத்வஜ பாண்டியன். வில்லவர் குலம்-சாரங்கத்வஜ பாண்டியன் மீனவர் குலம்-மீனவ பாண்டியன்போன்றவர்கள்.

வில்லவர் குலங்களின் இணைப்பு

பிற்காலத்தில் அனைத்து வில்லவர் குலங்களும் மீனவர் குலங்களுடன் ஒன்றிணைந்து நாடாள்வார் அல்லது நாடார் குலங்களை உருவாக்கின.

பாண்டிய ராஜ்ஜியத்தின் பூர்வீகம்

பாண்டிய ராஜ்ஜியத்தின் ஆரம்பம் குமரிக்கண்டத்தில் வரலாற்றுக்கு முந்தையது. தலைநகரங்கள் தென் மதுரை, கபாடபுரம் மற்றும் மதுரை.

காலவரிசை

1. முதல் பாண்டிய இராச்சியத்தின் அடித்தளம் (கிமு 9990)
2. முதல் பிரளயம் (கிமு 5550)
3. இரண்டாவது பாண்டிய சாம்ராஜ்யம்
4. இரண்டாம் பிரளயம் (கிமு 1850)
5. மூன்றாவது பாண்டிய சாம்ராஜ்யம்
6. சங்க யுகத்தின் முடிவு (கி.பி. 1)


பாண்டியன் ராஜ்யத்தின் பிரிவு

பண்டைய பாண்டிய இராச்சியம் தமிழத்தில் சேர, சோழர் மற்றும் பாண்டியன் ராஜ்யங்களாக பிரிக்கப்பட்டது.

வில்லவர் ராஜ்யங்களின் முடிவு.

கி.பி 1120 இல் அரேபியர்களின் உதவியுடன் கேரளாவைத் தாக்கிய துளு-நாயர் படையெடுப்பைத் தொடர்ந்து சேர வம்சம் கொடுங்கலூரில் இருந்து கொல்லத்திற்கு மாற்றப்பட்டது. கி.பி 1310 இல் மாலிக் கஃபூரின் பாண்டிய ராஜ்ஜியத்தின் மீதுள்ள தாக்குதல் மற்றும் தோல்விக்குப் பிறகு, வில்லவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். கேரளா முழுவதும் துளு-நேபாள ஆட்சியின் கீழ் வந்தது. கி.பி 1335 க்குப் பிறகு கேரளாவில் அஹிச்சத்திரம்-நேபாளத்தைச் சேர்ந்த நாகர்கள் ஆதிக்கம் செலுத்தினர்.

தமிழ்நாட்டை தெலுங்கு பலிஜாக்கள் மற்றும் வாணாதிராயர்கள் ஆக்கிரமித்தனர். வாணாதிராயர்கள் தமிழ்நாட்டின் கங்கை நாகர்களின் தலைவர்கள் ஆனார்கள். கி.பி 1377 க்குப் பிறகு கேரளாவும் தமிழகமும் பாண மன்னர்களால் ஆளப்பட்டன. கேரளா மற்றும் தமிழ்நாடு வடுக நாகர்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டது.

தெற்கே வில்லவர் குடியேற்றம்
கேரளா
1. கொடுங்கலூரிலிருந்து கொல்லத்திற்கு இடம்பெயர்வு (கி.பி 1102)
2. கொல்லத்திலிருந்து திருவனந்தபுரம், கன்னியாகுமரி மற்றும் இலங்கைக்கு இடம்பெயர்வு (கி.பி 1335)

தமிழ்நாடு
1. தஞ்சாவூரில் இருந்து களக்காட்டுக்கு இடம்பெயர்வு (கி.பி 1310)
2. மதுரையிலிருந்து திருநெல்வேலிக்கு இடம்பெயர்வு (கி.பி 1310)
3. திருநெல்வேலியில் இருந்து கல்லிடைக்குறிச்சி மற்றும் அம்பாசமுத்திரத்திற்கு இடம்பெயர்வு (கி.பி. 1377 முதல் கி.பி .1640 வரை)

வட இந்தியாவில் வில்லவர்
வில்லவர் குலங்கள்
1. வில்லவர் = பில்
2. மலையர்
3. வானவர் = பாணா
4. மீனவர் = மீனா

வில்லவர் பட்டங்கள் மற்றும் பாணரின் பட்டங்கள் வில்லவர் = பில், பில்லவா, சாரங்கா, தானவா
மலையர் = மலெயா, மலயா
வானவர் = பாணா, வானாதிராயர்
மீனவர் = மீனா, மத்ஸ்யா
நாடாள்வார் = நாடாவா, நாடாவரு, நாடாவரா.
நாடார் = நாடோர்
பணிக்கர் = பணிக்கா
சான்றார் = சான்றாரா, சான்தா
பாண்டியன் = பாண்ட்யா
மாவேலி = மகாபலி

முடிவுரை

வில்லவர்-நாடார் குலங்கள் இந்தியா முழுவதையும் ஆண்ட வில்லவர் மற்றும் பாண குலங்கள் என்று அழைக்கப்படும் பழங்குடி ஆட்சியாளர்களைச் சேர்ந்தவை. டெல்லி படையெடுப்பைத் தொடர்ந்து நடந்த இனப்படுகொலைதான் வில்லவரின் வீழ்ச்சிக்குக் காரணம். மற்றொரு காரணம் வில்லவர் மற்றும் பணிக்கர் மற்ற நாடுகளுக்கு வெளியேறியது.


__________________________________________